3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 3 மாதங்களாக சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ளன. இந்நிலையில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை துவங்க ஐசிசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணியுடன் வரும் ஜூலை 8ம் தேதி பயோசெக்யூர் முறையில் 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது.
டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ்
இதற்கென இரு அணி வீரர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு முறையான கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து அணி வீரர்களுக்கு முதல்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு இரண்டாவது கட்டமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
2வது கட்ட பரிசோதனை
30 வீரர்கள் மற்றும் 15 ஊழியர்களுக்கு 10 நாட்களுக்கு முன்பு முதல்கட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளது. இந்நிலையில், வரும் 8ம் தேதி துவங்கவுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக, 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்திலும் இங்கிலாந்து அணியினர் விளையாட உள்ளனர். பயிற்சி ஆட்டங்களுக்கு முன்னதாக அவர்களுக்கு 2வது கட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
கேமரா மூலம் கண்காணிப்பு
வீரர்களுக்கு வாரத்திற்கு இருமுறை பரிசோதனைகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தினமும் அவர்கள் மைதானத்தில் மேற்கொள்ளும் பயிற்சிகள் தெர்மல் கேமராக்கள்மூலம் கண்காணிக்கப்பட்டு, சமூக விலகலை அவர்கள் முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பது குறித்தும் கண்காணிக்கப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.