"ஆண்டுமுழுவதும் விளையாட விருப்பமில்லை"
கடந்த ஜூன் மாதத்தில் தன்னுடைய ஓய்வை அறிவித்த இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் யுவராஜ்சிங், தன்னுடைய ஓய்வுகாலத்தை கொண்டாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரியவர்
இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் தனக்கான ரசிகர் கூட்டத்தை கொண்டவர் யுவராஜ்சிங், இவர் இந்தியா சார்பில் 304 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், 58 சர்வதேச டி20 போட்டிகளிலும் 40 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
அபுதாபி டி10 தொடரில் ஆட்டம்
கனடாவில் நடைபெற்ற உலக டி20 போட்டியில் பங்கேற்று விளையாடிய யுவராஜ்சிங், தற்போது அபுதாபி டி10 தொடரில் விளையாடி வருகிறார். இதில் கனடாவில் விளையாடிய போட்டிகளை தான் மிகவும் விரும்பி விளையாடியதாக அவர் கூறியுள்ளார்.
2 அல்லது 3 தொடர்களில் விளையாட விருப்பம்
தற்போது தன்னுடைய ஓய்வு காலத்தை விருப்பத்துடன் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள யுவராஜ் சிங், ஆண்டு முழுவதும் கிரிக்கெட்டை விளையாட விருப்பமில்லை என்றும், கிரிக்கெட்டை மிஸ் செய்யும் போது, இதுபோன்ற இரண்டு அல்லது மூன்று தொடர்களில் விளையாட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஓய்விற்கு பிறகான செயல்களை செய்ய திட்டம்
இந்த ஓய்வு காலத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவழிக்க தான் விரும்புவதாகவும், மேலும் ஒய்வு காலத்தில் செய்வதற்காக திட்டமிட்ட பணிகளை செய்யவும் விரும்புவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
ரிலாக்ஸ் செய்ய விருப்பம்
கடந்த 17 ஆண்டுகளாக கிரிக்கெட்டிலேயே முழு கவனத்தையும் செலுத்தி விளையாடி வந்ததாக தெரிவித்த யுவராஜ் சிங், தற்போது தன்னுடைய வாழ்க்கையை ரிலாக்சாக செலவழிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
டி10 போட்டிகள் வரவேற்பு பெறாது
டி20 போட்டிகளில் 4வது இடத்தை பெற்ற யுவராஜ் சிங், டி10 போட்டிகள், டி20யை போல ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறாது என்று தெரிவித்துள்ளார். டி10 போட்டிகளில் பேட்ஸ்மேனுக்கு சுதந்திரம் இல்லை என்றும் ரன்களை குவிக்க அவகாசம் இருக்காது என்றும் கூறியுள்ளார்.