கோலியின் கம்பேக்
குறிப்பாக விராட் கோலியின் மீது தான் ரசிகர்களின் பார்வை உள்ளது. நீண்ட ஓய்வுக்கு பிறகு ஆசிய கோப்பை தொடரில் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய கோலி, ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார். ஆசிய கோப்பையில் இருந்து தற்போது வரை 8 இன்னிங்ஸ்களில் விளையாடி 3 அரைசதங்களை விளாசியுள்ளார். இதுமட்டுமல்லாமல் நீண்ட நாள் காத்திருப்பான ஒரு சதத்தையும் பூர்த்தி செய்துள்ளார். இதனால் டி20 உலகக்கோப்பையில் கோலியின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஸ்ரீதர் பெருமிதம்
இந்நிலையில் விராட் கோலி தனது உச்சகட்ட நிலையில் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் கூறியுள்ளார் இதுகுறித்து பேசிய அவர், விராட் கோலி தற்போது சரியான மனநிலையுடன் இருக்கிறார். முன்பு ஏதோ அவரிடம் அழுத்தம் இருந்தது. நீண்ட ஓய்வும், குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டதும் கோலிக்கு அற்புதத்தை கொடுத்தது. பாகிஸ்தானுடனான முதல் போட்டியில் இருந்தே நம்மால் அதை உணர முடிந்தது.
உறுதியாக கூறலாம்
ஆஸ்திரேலியாவுடனான 3வது டி20 போட்டியில் கோலி ஆடிய இன்னிங்ஸை வைத்து கிங் கோலி மீண்டும் வந்துவிட்டார் என்பதை உறுதியாக கூறிவிடலாம். ஃபீல்டிங்கில் ஒரு சிறுத்தையை போல உள்ளது. பேட்டிங்கில் எந்தவித குறையுமே இல்லை. இவரால் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு பெரும் நன்மை கிடைக்கப்போகிறது என ஸ்ரீதர் கூறியுள்ளார்.
புதிய பொறுப்பு
ஆஸ்திரேலியாவுடனான கடைசி டி20 போட்டியில் விராட் கோலி 48 பந்துகளில் 63 ரன்களை விளாசினார். ஆக்ரோஷ பேட்டிங்கால் ஒருபுறம் விக்கெட்கள் சரிந்த போதும், தனது பொறுப்பு கடைசி வரை தூண் போல நின்று பார்ட்னர்ஷிப் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்துக்கொண்டார். இதே பணியை தான் இனி டி20 உலகக்கோப்பையிலும் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.