தேர்தல் குறித்து அடுத்த வாரத்தில் அறிவிப்பு
ஐசிசி தலைவராக இருந்த சஷாங்க் மனோகர் தன்னுடைய பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார். புதிய ஐசிசி தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய தலைவர் பொறுப்பேற்பதற்கு முன்னதாகவே சஷாங்க் மனோகர் பதவி விலகியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
சஷாங்கிற்கு ஐசிசி சிஇஓ நன்றி
ஐசிசி புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்வரையில் துணை தலைவர் இம்ரான் க்வாஜா அதன் பொறுப்புகளை மேற்கொள்வார் என்று ஐசிசி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இதனிடையே, தன்னுடைய பதவிக்காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த சஷாங்கிற்கு ஐசிசி சிஇஓ மனு சாவ்னி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அதிகரித்துள்ளதாக கருத்து
இந்நிலையில், சஷாங்க் மனோகரின் திடீர் பதவி விலகல், ஐசிசியில் பிசிசிஐயின் செல்வாக்கு அதிகரித்து வருவதை காட்டுவதாக முன்னாள் பிசிசிஐ பொருளாளர் அனிருத் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதனிடையே, பதவி விலகியது அவரது சொந்த முடிவு என்று தெரிவித்துள்ள பிசிசிஐயின் மற்றொரு நிர்வாகி, ஆனால் இந்த ஆண்டிற்கான டி20 உலக கோப்பை குறித்த முடிவை எடுக்காமல் அவர் விலகியது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்தரத்தில் டி20 உலக கோப்பை முடிவு
தான் பதவி விலகும் முடிவை எடுத்த சஷாங்க் மனோகர், டி20 உலக கோப்பை குறித்து முடிவெடுக்கும் திறன் அற்றவரா, ஏன் அந்த முடிவை அந்தரத்தில் விட்டுவிட்டு அவர் பதவி விலகியுள்ளார் என்று அந்த நிர்வாகி கேள்வி எழுப்பியுள்ளார். புதிய தலைவர் நியமிக்கப்படும்வரை அவர் தனது பதவியை நீடித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அவர் செய்யாதது ஐசிசியில் அவரது செல்வாக்கு குறைந்ததை காட்டுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.