உலகக்கோப்பை தோல்வி
2019 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதி வரை செல்லும் என பலரும் கணித்த நிலையில், அந்த அணி லீக் சுற்றில் படு மோசமாக ஆடி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. பல போட்டிகளில் மோசமான தோல்விகளை சந்தித்து விமர்சனத்திற்கு உள்ளானது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் குழப்பம்
அதே சமயம், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அமைப்புக்குள் பெரும் கலகம் நடந்து வந்தது. நிர்வாக அமைப்புக்குள் இருந்த அரசியல் பெரிதாகி, தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் அச்சாரத்தை ஆட்டிப் பார்த்தது. விளம்பரதாரர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
மூத்த வீரர்கள் விலகல்
ஏற்கனவே, ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வு அறிவித்த நிலையில், உலகக்கோப்பை தொடருக்கு பின் டேல் ஸ்டெய்ன், ஹஷிம் ஆம்லா உள்ளிட்டோர் ஓய்வு அறிவித்தனர். ஸ்டெய்ன் டி20 போட்டிகளில் மட்டும் ஆட இருப்பதாக அறிவித்தார். மூத்த வீரர்கள் அற்ற அணியாக மாறியது தென்னாப்பிரிக்கா.
புதிய பயிற்சியாளர்
பாப் டுபிளெசிஸ் மட்டுமே அணியை வழிநடத்தும் பொறுப்பில் இருந்தார். பயிற்சியாளர் யாரும் சரியாக அமையாத நிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பின் இயக்குனராக முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் பதவி ஏற்றார். அவர் முன்னாள் வீரர் மார்க் பவுச்சரை அணியின் பயிற்சியாளராக நியமித்தார்.
க்விண்டன் டி காக்
இனி இளம் தலைமுறையினர் தலைமையில் தென்னாப்பிரிக்க அணியை புத்துணர்வு பெற வைக்க வேண்டும் என்ற முயற்சியில் விக்கெட் கீப்பர் க்விண்டன் டி காக் சில தொடர்களில் அணியின் கேப்டனாக செயல்பட்டார். சமீபத்தில் ஒருநாள் அணியின் கேப்டனாக அவர் அறிவிக்கப்பட்டார். அப்போதே பாப் டுபிளெசிஸ்-இன் கேப்டன் பதவி விரைவில் பறிக்கப்படும் என்ற பேச்சுக்கள் இருந்தது.
கேப்டன் பதவியில் இருந்து விலகல்
இந்த நிலையில், பாப் டுபிளெசிஸ் தான் டெஸ்ட் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்தார். க்விண்டன் டி காக் தலைமையில் அடுத்த தலைமுறை வீரர்கள் உருவெடுக்க உதவும் வகையில் தான் பதவி விலகி இருப்பதாக அவர் கூறி உள்ளார்.
என்ன சொன்னார் டுபிளெசிஸ்?
மேலும், அவர் கூறுகையில் அணி புதிய பாதையில், புதிய தலைமையின் கீழ் செல்லும் நிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் நன்மை கருதி கேப்டன்சியில் இருந்து விலகி இருக்கிறேன். க்விண்டன், மார்க் பவுச்சர் மற்றும் அணியின் சக வீரர்களுக்கு தான் முழு ஒத்துழைப்பு அளித்து அணியை மறு கட்டமைப்பு செய்ய உதவுவேன்" என்றும் கூறி உள்ளார்.
மோசமான நேரம்
"கடந்த சீசனில் என் கேப்டன்சியில் மிக சவாலான விஷயங்களை சந்தித்தேன். வெளியில் இருந்து பல பிரச்சனைகளை சமாளித்து, என் முழு ஆற்றலையும் அளித்தேன்" என்று கூறி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சந்தித்த பிரச்சனைகளின் போது தான் அணிக்காக போராடியதை குறிப்பிட்டுள்ளார் டுபிளெசிஸ்.
மூத்த வீரராக தொடர்வார்
தற்போது அணியில் கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலகி இருக்கும் அவர், பேட்ஸ்மேனாக, மூத்த வீரராக அணியில் தொடர்ந்து இடம் பெறுவார் என கருதப்படுகிறது. டி20 அணியில் அவருக்கு இடம் கிடைப்பது கடினமே. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் அவர் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
அடுத்த கேப்டன் யார்?
தென்னாப்பிரிக்க அணியின் அடுத்த கேப்டனாக க்விண்டன் டி காக் மூன்று வித கிரிக்கெட் அணிகளுக்கும் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலர், டெஸ்ட் அணிக்கு மார்கிரம் அல்லது பவுமாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.