ரசிகர்களுடன் உரையாடல்
இந்திய அணியின் சிறப்பான ஐந்து பௌலர்களுள் ஒருவராக புவனேஸ்வர் குமார் கருதப்படுகிறார். ஷமி, பும்ரா ஆகியோர்களுடன் இணைத்து இந்திய அணியின் சிறப்பான பௌலராக விளங்கிவரும் புவனேஸ்வர் குமார், டிவிட்டர் மூலம் ரசிகர்களுடன் கேள்வி -பதில் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். தன்னுடைய மனைவி, கேரியர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
மனைவி குறித்து புவனேஸ்வர் குமார்
அவருடைய மனைவி நுபூர் குறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த புவனேஸ்வர் குமார், அவர் மிகுந்த திறமை மிக்கவர் என்றும், பன்முக திறன் கொண்டவர் என்றும் நாய்கள் மீது பைத்தியமாக இருப்பார் என்றும் பெருமையுடன் தெரிவித்தார். சில நேரங்களில் தன்னைவிட அதிக முக்கியத்துவம் நாய்களுக்கு தான் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
அலாவுதீன் பூதத்திற்கு விடுதலை
தன்னை குறித்த மீம்ஸ்களை பார்த்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு சிரித்துவிடுவேன் என்றும் பதிலளித்துள்ளார். தொடர்ந்து அலாவுதீன் அற்புத விளக்கு கிடைத்து பூதத்திடம் 3 விருப்பங்களை கேட்க சந்தர்ப்பம் கிடைத்தால் என்ன வரம் கேட்பீர்கள் என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த புவி, உலக மக்களை கொரோனாவிடம் இருந்து மீட்க கேட்பேன், அவசரத்திற்கு ஒரு வரத்தை வைத்துக் கொள்வேன் மற்றும் பூதத்தை விடுவித்து விடுவேன் என்று தெரிவித்தார்.
மாற்றுவதற்கு எதுவுமில்லை
இந்த உலகத்தில் மாற்றம் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தால் எதை மாற்றுவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இந்தஉலகம் மிகவும் பூரணமானது என்றும் அதில் மாற்றம் செய்வதற்கு எதுவும் இல்லை என்றும் அவர் பதிலளித்தார். எச்சில் தடை குறித்த கேள்விக்கு பதிலளித்த புவனேஸ்வர் குமார், இது மிகவும் சவாலானது என்றும், கூடிய விரைவில் அனைத்தும் மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.