பேஸ்புக் லைவ் சாட்டில் பேச்சு
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா, லா லிகாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திற்காக லைவ் சாட்டில் தொகுப்பாளர் ஜோ மாரிசனின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவரிடம் கிரிக்கெட் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அவை அனைத்திற்கும் பொறுமையாக ரோகித் சர்மா பதிலளித்து பேசினார்.
முக்கிய காரணம் ரசிகர்கள்தான்
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் அனைத்து போட்டிகளும் சிறிது காலத்திற்கு ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜோ மாரிசன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா, விளையாட்டில் தீப்பொறி பறக்க காரணமானவர்கள் ரசிகர்கள் என்றும், விளையாட்டின் கவர்ச்சிக்கு காரணமாக அவர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறினார்.
ரோகித் சர்மா வேண்டுகோள்
ஒவ்வொரு விளையாட்டிற்கும் ரசிகர்கள் முக்கிய தேவையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள ரோகித் சர்மா, முதலில் பாதுகாப்பு நடைமுறைகளை கருத்தில் கொண்டு விளையாட்டை காலி மைதானங்களில் துவக்கிவிட்டு, பின்பு சிறிது சிறிதாக ரசிகர்களை மைதானங்களில் அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வழிமுறைகளில் கவனம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச அளவில் அனைத்து போட்டிகளும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த வாரத்தில் ஜெர்மனியின் பண்டஸ்லிகா கால்பந்து போட்டிகள் துவங்கப்பட்டுள்ளன. இதேபோல ஸ்பெயினின் லா லிகா போட்டிகளை துவங்க அனுமதி கிடைத்துள்ளது. பாதுகாப்பு வழிமுறைகளை கருத்தில் கொண்டு இவை நடத்தப்பட உள்ளன.