2020 மகளிர் உலகக்கோப்பை
2020 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. அதில் இந்திய அணி மோசமாக ஆடி 85 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
அசத்தல் ஆட்டம்
ஆனால், இந்த தொடரில் துவக்கம் முதல் இந்திய அணி மிக சிறப்பாக ஆடி வந்தது. குரூப் ஏ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, அதே பிரிவில் இடம் பெற்ற ஆஸ்திரேலியா உள்பட அனைத்து அணிகளையும் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று இருந்தது.
அரையிறுதிப் போட்டி
அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா ஆட இருந்தது. ஆனால், மழை காரணமாக அந்தப் போட்டியில் டாஸ் கூட போடப்படவில்லை. அதனால், குரூப் பிரிவில் முதல் இடம் பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
கோலி, சேவாக் வாழ்த்து
இந்திய மகளிர் அணி டி20 உலகக்கோப்பை தொடரில் தன் முதல் இறுதிப் போட்டிக்கு சென்ற நிலையில், கோலி மற்றும் சேவாக் மகளிர் அணிக்கு வாழ்த்து கூறி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தனர். குறிப்பாக இறுதிப் போட்டிக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறி இருந்தனர்.
இந்தியா படுதோல்வி
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சந்தித்த இந்திய அணி மோசமாக ஆடியது. பந்துவீச்சில் சொதப்பி, ஆஸ்திரேலியாவை 185 ரன்கள் குவிக்க விட்டது இந்தியா. அடுத்து சேஸிங் செய்ய முடியாமல் 99 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆகிம படுதோல்வி அடைந்தது.
வாழ்த்தியதால் தோல்வி?!
இந்த நிலையில், இந்திய மகளிர் அணியின் தோல்விக்கு சேவாக் மற்றும் விராட் கோலி வாழ்த்து கூறியது தான் காரணம். அவர்கள் அப்படி வாழ்த்து கூறினாலே, இந்தியா ஐசிசி தொடர்களில் தோல்வி அடைந்து விடும் என ஒரு ரசிகர் பொங்கி எழுந்து ஒரு காரியம் செய்துள்ளார்.
ரசிகர் மனு
சமூகத்தில் மாற்றம் கோரும் நபர்கள், Change.org என்ற தளத்தில், தங்கள் கோரிக்கையை முன் வைத்து மக்களின் ஆதரவைக் கோரலாம். அந்த வகையில், அந்த ரசிகர் கோலி, சேவாக் இந்திய அணிக்கு, ஐசிசி தொடர்களில், குறிப்பாக அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்கு முன் வாழ்த்து தெரிவிக்கக் கூடாது என தன் மனுவில் கூறி இருக்கிறார்.
முடக்க வேண்டும்
மேலும், இவர்கள் நம் வெற்றியை வாழ்த்து கூறி கெடுத்து வருகிறார்கள். அவர்கள் இது போன்ற வாழ்த்து செய்திகளை கூறுவதை நிறுத்தாவிட்டால் அவர்கள் சமூக ஊடக கணக்குகளை முடக்க வேண்டும் எனவும் அவர் தன் மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
600 பேர் ஆதரவு
ஆயிரம் பேர் வரை அந்த மனுவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கைக்கு இது வரை 600க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து இருப்பது மேலும் வேடிக்கையாக அமைந்துள்ளது.
கோலி மீது கோபம்
அந்த மனுவுக்கு ஆதரவு தெரிவித்த பலர், சேவாக்கை விட, கோலி மீது தான் கோபத்தில் உள்ளனர். இந்திய கிரிக்கெட்டில் கோலி ஒரு மோசமான எதிர்மறை அதிர்வை உண்டாக்குகிறார் என ஒரு ரசிகர் அந்த மனுவின் கீழ் கருத்து கூறி இருப்பது இதற்கு ஒரு உதாரணம்.