சென்னை: இதுவரை பார்த்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளிலேயே சுவாரஸ்யமே இல்லாத போட்டி இதுதான்... ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையிலான இறுதிப் போட்டிக்கு மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பு இது.
அதிரடியாக இருக்கும் என்று எதிர்பார்த்து கடைசியில் ஒன்றுமே இல்லாமல் போய் விட்டது இந்த இறுதிப் போட்டி என்பது உண்மைதான்.
மெக்கல்லம், கப்தில், செளதி, போல்ட் ஆகியோர் கலக்கப் போகிறார்கள், ஆஸ்திரேலியா பதிலடி கொடுக்கும்.. எனவே படு பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சப்பென்று போய் விட்டது இந்த இறுதிப் போட்டி.
ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி நாறிப் போய் விட்டது. சொந்த ஊரில், தம்மாத்தூண்டு கிரவுண்டுகளில் வைத்து வந்த அணிகளையெல்லாம் வளைத்து வளைத்து சாத்தி அனுப்பிய நியூசிலாந்து, மெல்போர்ன் மைதானத்தைப் பார்த்து மல்லாந்து விழுந்து விட்டது.
ஆஸ்திரேலியாவை சமாளித்து அடித்து நொறுக்க, கொஞ்சம் கூட திராணியே இல்லை இந்த அணியிடம்.
இந்த சொதப்பல் ஆட்டம் காரணமாக பெரிய ஸ்கோரை அது எட்ட முடியாமல் போனது. இதனால் சேஸிங்கிலும் ஒரு விறுவிறுப்பு, பரபரப்பு இல்லாமல் போய் விட்டது.
இந்தியா இறுதிப் போட்டிக்கு வராத காரணத்தால் இந்திய ரசிகர்களும் கூட போட்டியின் மீது ஒரு ஆர்வம் இல்லாமல் காணப்பட்டனர். பாதி வீடுகளில் டிவியைப் போடவே இல்லை.
சமூக வலைதளங்களிலும் விதம் விதமான கருத்துக்களைக் காண முடிந்தது.. இறுதிப் போட்டி சுவராஸ்யமே இல்லை என்ற கருத்து காணப்பட்டது.
கோப்பையை சீனிவாசன் வழங்கியதை வைத்து நாங்க திருப்பிக் கொடுத்துட்டோம் என்ற கமெண்ட்டையும் காண முடிந்தது.
பேசாமல் தென் ஆப்பிரி்க்கா வந்திருந்தால் நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு கடும் போட்டியைக் கொடுத்திருக்கும் என்ற ஆதங்கத்தையும் காண முடிந்தது.
நியூசிலாந்து எப்படியும் கடும் போட்டியைக் கொடுத்து ஆஸ்திரேலியாவைக் கலங்கடிக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்தப் போட்டி நிச்சயம் பெரும் ஏமாற்றம்தான்.
எப்படி ஆஸ்திரேலியாவிடம் இந்தியா சரண்டர் ஆனதோ, கிட்டத்தட்ட அதேபோல நியூசிலாந்தும் பதுங்கிப் போய் விட்டது... !