இந்தியா சொதப்பல்
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் வெல்லிங்டனின் பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா ஆடி வருகிறது. இரண்டு இன்னிங்சிலும் இந்தியா தனது சொதப்பலான ஆட்டத்தையே பதிவு செய்து வருகிறது. முதல் இன்னிங்சில் 165 ரன்களில் இந்தியா சுருண்டது.
குறைந்த ரன்களில் ஆட்டமிழப்பு
ஊக்கமருந்து சோதனை காரணமாக 8 மாதங்கள் தடை பெற்றிருந்த பிரித்வி ஷா, தடைக்கு பிறகு தற்போதுதான் தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். இந்நிலையில், நியூசிலாந்திற்கு எதிரான இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறக்கப்பட்ட அவர் இரண்டு இன்னிங்சிலும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
பிரித்வி ஷாவின் சொதப்பல் ஆட்டம்
இந்திய துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் காயம் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை. இதேபோல தொடர்ந்து போட்டிகளில் விளையாடிவந்த கே.எல். ராகுலுக்கும் இந்த போட்டியில் ஒய்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில் துவக்க வீரராக களமிறக்கப்பட்ட பிரித்வி ஷா, தனது நிலையான ஆட்டத்தை பதிவு செய்யாமல் இரண்டு இன்னிங்சிலும் 16 மற்றும் 18 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
சமூக வலைதளத்தில் வறுத்தெடுப்பு
துவக்க வீரர் என்ற முக்கியமான பொறுப்பை அனுபவமற்ற பிரித்வி ஷாவிற்கு கொடுத்ததற்கு ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் கொடுத்து வருகின்றனர். பிரித்வி ஷாவை நீக்கிவிட்டு சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரசிகர்கள் கடும் விமர்சனம்
பிரித்விக்கு உள்ளூர் ஆட்டங்களிலேயே அனுபவம் உள்ளதாகவும், சர்வதேச போட்டிகளில் அவருக்கு போதிய அனுபவம் இல்லை என்றும் அவர் எப்போதும் ஒருவித தயக்கத்துடனும் அச்சத்துடனும் சர்வதேச போட்டிகளை எதிர்கொள்வதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். நியூசிலாந்திற்கு எதிரான இந்த சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள பிரித்வி, இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே 30க்கும் மேல் ரன் எடுத்துள்ளதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
கனவை தகர்த்த நியூசிலாந்து வீரர்
பிரித்வி ஷா பங்கேற்ற இந்த இரண்டு இன்னிங்சிலும் அவரை சொற்ப ரன்களில் நியூசிலாந்து பௌலர் டிரெண்ட் போல்ட் அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பியுள்ளார். இதன்மூலம், மீண்டும் இந்திய அணியில் சோபிக்கும் பிரித்வியின் கனவை அவர் தகர்த்துள்ளார். அடுத்த டெஸ்டிலாவது பிரித்வி தனது சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்வாரா என்ற எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். சர்வதேச போட்டிகளுக்கு ஏற்றாற்போல அவர் தனது ஆட்டத்தை வடிவமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.