பெங்களூரு: கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத பெயர்களில் ஒன்று ஹன்சி குரோனியே.. மாபெரும் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் உயர்ந்து கடைசியில் ஜீரோவாகிப் போன வரலாற்றுக்குச் சொந்தக்காரர் குரோனியே. குரோனியே மறைந்து 14 வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆனாலும், இன்னும் கூட ரசிகர்கள் மனதிலிருந்து விலகாமல்தான் உள்ளார் குரோனியே.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அட்டகாசமான கேப்டன்களில் ஒருவர்தான் குரோனியே. மாபெரும் ஹீரோவாக வலம் வந்த குரோனியே யாரும் எதிர்பாராத வகையில் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சையில் சிக்கினார். யாருமே நம்பாமல் விழித்த அந்த சமயத்தில், ஆம், நான் காசு வாங்கியது உண்மைதான் என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டு அனைவரது நெஞ்சங்களையும் நொறுக்கிப் போட்டவர் குரோனியே.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் 2002ம் ஆண்டு அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் அவரை தடை செய்தது. கடைசியில் ஒரு நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்க ஆரம்பித்தார் குரோனியே. 2002ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் நடந்த விமான விபத்தில் சிக்கி பலியானார் குரோனியே.
குரோனியே மரணமடைந்தபோது அவருக்கு வயது 32. தென் ஆப்பிரிக்க அணி இனவெறி காரணமாக சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 1991ம் ஆண்டு அந்தத் தடை நீங்கியது. இதையடுத்து மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு நாடி நரம்பாக இருந்த சில வீரர்களில் குரோனியேவும் முக்கியமானவர்.
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி ஒன்றில் தென் ஆப்பிரிக்கா அணியை தோல்வி அடைய வைப்பதற்காக அவரிடம் புக்கிகள் பேரம் பேசி பணம் கொடுத்தனர். அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டார் குரோனியே. மேலும் தனது அணி வீரர்கள் சிலரிடம் இந்த டீலைக் கூறி பணமும் கொடுத்தார். இந்த விவகாரம் வெடித்து வெளியே வந்து கிரிக்கெட் உலகை அதிர வைத்தது.
குரோனியே தனது தவறை ஒத்துக் கொண்டார். அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். ஆயினும் அவருக்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும், பின்னர் ஐசிசியும் வாழ்நாள் தடை விதித்தன. அதன் பின்னர் குரோனியே சகாப்தம் கிரிக்கெட் உலகிலிருந்து விடை பெற்றது. குரோனியே விமான விபத்தில் பலியான 14வது ஆண்டு இன்று!