மழையின் குறுக்கீடு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் சவுத்தாம்டன் நகரில் நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடாமல் பாதிக்கப்பட்டுள்ளது ( உணவு இடைவெளி வரை ஆட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது). தொடர்ந்து இந்த மழை நீடித்தால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விமர்சனம்
இந்நிலையில் மிக முக்கியமான போட்டிகளை நடத்துவதற்கு ஐசிசி அமைப்பு சரியான இடங்களை தேர்வு செய்யவில்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். வானிலை குறித்த எச்சரிக்கைகளையும் மீறி ஐசிசி தவறான மைதானங்களை முக்கிய தொடர்களுக்கு பயன்படுத்துவதாக கூறி வருகின்றனர். அவர்களின் இந்த விமர்சனங்களுக்கு காரணம் 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடர்களே ஆகும்.
சாம்பியன்ஸ் டிராபி
2017ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த தொடரில் பல்வேறு ஆட்டங்கள் தொடர் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் மோதிய இறுதிப்போட்டி மழையினால் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் ரசிகர்கள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அப்போது இங்கிலாந்தின் வானிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளாமல் ஐசிசி முடிவெடுத்ததே பல போட்டிகள் பாதிக்கப்பட காரணமாக இருந்தது.
உலகக்கோப்பை
இதே போல 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரும் இங்கிலாந்தில் தான் நடைபெற்றது. இந்த தொடரிலும் பல்வேறு போட்டிகள் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டது. சில போட்டிகளில் ஓவர்கள் குறைக்கப்பட்ட நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய லீக் போட்டி ஒரு ஓவர் கூட வீசப்படாமல் நிறுத்தப்பட்டது.
மழையின் அச்சுறுத்தல்
இதே போல உலகக்கோப்பையில் அரையிறுதியில் இந்திய அணி தோற்பதற்கு மழை முக்கிய காரணமாக கூறப்பட்டது. அந்தப் போட்டி தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக தாமதாக 2 நாட்கள் விளையாடப்பட்டது. முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 239 ரன்களை எடுத்திருந்தது. மழையால் ஆட்டம் தடைப்பட, அடுத்த நாள் இந்திய அணி தனது ஆட்டத்தைத் தொடங்கியது. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. இதனை போல தான் தற்போதும் இந்தியா - நியூசிலாந்து மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.