அதீத எச்சரிக்கை
மொகாலி ஒருநாள் போட்டியில் பொறுப்பற்ற சிறு பிள்ளைத்தனமான விக்கெட் கீப்பிங்கால் இந்தியாவை அசைத்து பார்த்துள்ளது. உலக கோப்பை அணியை தேர்வு செய்வதில் அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தி இருக்கிறது.
தினேஷ் கார்த்திக் வேண்டும்
அதே நேரத்தில் வலுவான, துடிப்பான, சமயோசிதமாக செயல்படக் கூடிய விக்கெட் கீப்பர் வேண்டும் என்ற குரல்களும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளன. ரசிகர் அனைவரும் கைகாட்டும் அவர் தினேஷ் கார்த்திக்.
15 ஆண்டுகள் கடந்தன
2004ம் ஆண்டே இந்திய அணியில் அறிமுகமான தினேஷ் கார்த்திக், அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் உள்ளார். அணியில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் 91 ஒருநாள் போட்டிகளிலும் 26 டெஸ்ட் போட்டிகளிலும் மட்டுமே ஆடியுள்ளார்.
த்ரில் வெற்றி
அதற்கு காரணம் தொடர்ச்சியாக அணியில் சேர்க்கப்படாததுதான். கடந்த ஆண்டு நடந்த நிதாஹஸ் டிராபி டி20 தொடரின் இறுதி போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணியை த்ரில் வெற்றி பெற செய்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக டி20 அணியில் தினேஷ் கார்த்திக்கு இடம் கிடைத்தது.
திறம்பட வாய்ப்பு
உலக கோப்பையை மனதில் வைத்து மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவரும் வாய்ப்புகளை பயன்படுத்தினாலும். பெரிய இன்னிங்சைஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. போட்டியை வெற்றியுடன் முடித்து வைக்கக்கூடிய, மிடில் ஆர்டர் ப்ளேயராக அவர் திறம்பட செயலாற்றினார்.
அனுபவம் உள்ளவர்
ரஞ்சி டிராபி என உள்ளூர் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்த அனுபவம் உள்ளவர். இன்னும் சொல்ல போனால், ஐபிஎல் தொடரில் அவர் எந்த அணியில் ஆடுகிறாரோ அந்த அணிக்கு அவர் தான் விக்கெட் கீப்பர்.
அழைத்துச் செல்லலாம்
எனவே... இத்தனை ப்ளஸ்களை கருத்தில் உலக கோப்பை தொடருக்கான அணியில் ரிஸ்க் எடுக்காமல் அவரை அழைத்து செல்லலாம். ஆனால்.. பிசிசிஐ அமைப்போ.. ரிஷப் பண்ட் மேலேயே ஒரு கண் வைத்திருக்கிறது.
மிக பெரிய விளைவு
மொகாலி ஆட்டத்தில் அவரின் கவனக்குறைவு, பொறுப்பற்ற விக்கெட் கீப்பிங்.. மிக பெரிய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே... தினேஷ் கார்த்திக்கை கைவிடாமல் இம்முறை அணியில் இடம்பெற செய்ய வேண்டும்.
கங்குலி கருத்து
உலக கோப்பைக்கு மாற்று விக்கெட் கீப்பராக அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்கை அழைத்து செல்ல வேண்டும் என்பதுதான் முன்னாள் கேப்டன் கங்குலியின் கருத்தும் கூட. ரிஷப் பண்ட் இந்த உலக கோப்பைக்கு தேவையில்லை. அவருக்கான வாய்ப்புக்காக அவர் காத்திருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்ததையும் பார்க்க வேண்டும்.
பொருத்தமான வீரர்
ஏன் என்றால் உலக கோப்பையில் ரிஷப் பண்ட் மொகாலியில் செய்ததுபோன்ற தவறுகளை செய்தால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பேட்டிங்கை மனதில் வைக்காமல் மாற்று விக்கெட் கீப்பராக எடுக்கப்படுபவர் சிறந்த விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும். அதற்கு தினேஷ் கார்த்திக் முற்றிலும் பொருத்தமானவர். பிசிசிஐ கவனத்தில் கொள்ளுமா?