வீட்டிலேயே கீப்பிங் பயிற்சி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து கிரிக்கெட் வீரர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில், விக்கெட் கீப்பர் விரித்திமான் சாஹாவும் தன்னுடைய வீட்டிலேயே முடங்கியுள்ளார். ஆயினும் தான் தொடர்ந்து கேட்ச் பயிற்சி உள்ளிட்டவற்றை தொடர்ந்து வருவதாகவும் போட்டிகளில் விளையாட தன்னை தயார் படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உதவி செய்யும் தந்தை
தன்னுடைய அப்பார்ட்மெண்ட்டில் தன்னுடைய வீட்டிலேயே கேட்சிங் உள்ளிட்ட கீப்பிங் பயிற்சிகளை தான் மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு தன்னுடைய தந்தை பிரசாந்தா சாஹா தனக்கு பெரிதளவில் உதவி வருவதாகவும் சாஹா கூறியுள்ளார். மேலும் தன்னுடைய அபார்ட்மெண்ட் வளாகத்தில் தான் நடைபயிற்சி உள்ளிட்டவற்றை செய்துவருவதாகவும், ஆனால் ரன்னிங் பயிற்சி செய்வது மட்டுமே தற்போது இயலாத செயலாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு மறுப்பு
கடந்த தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான தொடர்களில் கீப்பராக செய்லபட்டு சிறப்பான ஆட்டத்தை ரசிகர்களுக்கு அளித்தார் விரித்திமான் சாஹா. ஆனால் நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலையில், போட்டிகளுக்கு தன்னை எப்போதும் தயாராக வைத்துக் கொள்வது மட்டுமே தன்னுடைய கடமை என்றும், செலக்ஷன் கமிட்டிக்கு என்று சில வழிமுறைகள் இருக்கும் என்றும் அதுகுறித்து தான் கவலை கொள்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கால அவகாசம் தேவையில்லை
வீரர்கள் சர்வதேச போட்டிகளுக்கு தயாராக 6 முதல் 8 வாரங்கள் தேவைப்படும் என்று பயிற்சியாளர்கள் கூறிவருகின்றனர். ஆனால் இதுகுறித்து மறுப்பு தெரிவித்துள்ள சாஹா, அது அவரவர் தனிப்பட்ட மனநிலையை பொறுத்தது என்றும் கூறியுள்ளார். பௌலர்களுக்கு வேண்டுமானால், இந்த காலஅவகாசம் தேவைப்படும் என்றும் ஆனால் பேட்ஸ்மேன்கள் மற்றும் கீப்பர்களுக்கு இது அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.