ஒத்திவைக்கப்பட்ட தொடர்
ஐபிஎல் 2021 தொடர் சில தினங்களுக்கு முன்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அணி வீரர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ ஒத்திவைத்து அறிவித்தது. இதையடுத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த ஊர்கள் மற்றும் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர்.
சிறப்பான சேத்தன் சகரியா
இந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமாகி விளையாடிய சேத்தன் சகரியா 7 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து அவர் கடந்த வாரத்தில் தன்னுடைய வீட்டிற்கு திரும்பினார்.
சகரியா தந்தைக்கு கொரோனா
அப்போது அவரது தந்தைக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சகரியாவும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் தற்போது அவரது தந்தை கொரோனா பாதிப்பால் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
சகரியா குடும்பத்திற்கு ஆறுதல்
இதை சேத்தன் சகரியாவின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உறுதி செய்துள்ளது. இந்த உயிரிழப்பு துரதிர்ஷ்டவசமானது என்றும் இந்த நேரத்தில் தந்தையை இழந்து வாடும் சகரியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தங்களது பிரார்த்தனைகள் சென்று சேரும் என்றும் ராஜஸ்தான் அணி தெரிவித்துள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் இழப்பு
முன்னதாக கொரோனாவால் தன்னுடைய தாய் மற்றும் சகோதரியை பிரபல கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி இழந்துள்ளார். இந்நிலையில் தற்போது சேத்தன் சகரியா தன்னுடைய தந்தையை இழந்துள்ளது கிரிக்கெட் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.