கொரோனாவால் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் 2020 தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய மற்றும் சர்வதேச வீரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதிகமான பணஓட்டம் உள்ள இந்த தொடர் நிறுத்தப்பட்டால் 5000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நடத்த முடியாத சூழல்
இந்நிலையில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடர், நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. அந்த தொடரை ஒத்திவைக்க ஐசிசி நிர்வாகிகள் குழு பல நிலைகளில் கூடி ஆலோசனை மேற்கொண்டுள்ளது. மேலும் இந்த மாதத்திற்கு முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஐசிசி தலைவர் சஷாங்க் மனோகர் பதவி விலகியுள்ள நிலையில், இதுகுறித்து முடிவெடுக்கப்படாமல் உள்ளது.
ஏமாற்றம் அளிக்கிறது.. பிசிசிஐ
இந்நிலையில், டி20 உலக கோப்பை குறித்து பல கூட்டங்களை நடத்தியும், ஒரு முடிவை எடுக்காத ஐசிசியின் நடவடிக்கை ஏமாற்றமளிப்பதாக பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முடிவை ஐசிசி எப்போது வேண்டுமானாலும் எடுக்கட்டும் என்றும் அதற்காக பிசிசிஐ காத்திருக்காது என்றும் கூறிய அவர், ஐபிஎல்லுக்கான வேலைகளை திட்டமிடத் துவங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் திட்டமிடல்
டி20 உலக கோப்பை குறித்த ஐசிசி தாமதத்தால், ஏற்கனவே அதிகமான நாட்கள் கடந்து விட்டதாகவும் ஐபிஎல் அணிகளும், இந்த முடிவிற்காக காத்திருக்காமல் பிசிசிஐ ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று கோரியுள்ளதாகவும் துமால் மேலும் கூறினார். ஐபிஎல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் ஐபிஎல் செப்டம்பர் மாத இறுதியில் துவங்கும் என்று கூறியுள்ள நிலையில், தற்போது துமாலும் அதை உறுதிப்படுத்தும் வகையில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது-