சர்வதேச ஒருநாள் போட்டி
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் விளையாடிய சர்வதேச டி20 தொடரின் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று அபார சாதனையுடன் தொடரை நிறைவு செய்தது. இதையடுத்து இரு அணிகளும் மோதிய 3 போட்டிகள் அடங்கிய சர்வதேச ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
இந்த தொடரின் 3வது மற்றும் இறுதிப்போட்டி மவுண்ட் மாங்கானுய்யில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 296 ரன்கள் அடித்தது. இந்தப் போட்டியில் விராட் கோலியும் மயங்க் அகர்வாலும் சொற்ப ரன்களில் வெளியேற, கே.எல். ராகுல் சதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 5வது சதத்தை அவர் பூர்த்தி செய்துள்ளார்.
3 விக்கெட்டுகளை வீழ்த்திய சாஹல்
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து துவக்க வீரர்கள் அபாரமாக விளையாடி அந்த அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். இந்திய பௌலர் சாஹல் 3 விக்கெட்டுகளை எடுத்து ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுத்தார். ஆனால் தொடர்ந்து பவுண்டரிகளையும் சிக்ஸ்களையும் விட்டுக் கொடுத்து இந்தியா பீல்டர்கள் ஒயிட்வாஷ் ஆக காரணமாக இருந்தனர்.
நியூசிலாந்து சிறப்பான ஆட்டம்
போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, சர்வதேச போட்டிக்கு தேவையான பீல்டிங் இல்லாததாலேயே இந்தியா 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்தார். இந்தியாவிடம் டி20 தொடரில் ஒயிட் வாஷ் ஆன நியூசிலாந்து தற்போது சிறப்பாக விளையாடி ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளதற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
டெஸ்ட் தொடரில் வெல்வோம்
தொடர்ந்து பேசிய விராட் கோலி, இந்தியா ஐசிசி டெஸ்ட் சாம்பியன்களாக உள்ள நிலையில், அடுத்ததாக விளையாடவுள்ள டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிக்கு தேவையான அணியாக இந்தியா உள்ளதை குறிப்பிட்டுள்ள அவர், ஆனால், மைதானத்தில் விளையாடுவதற்கு முன்பாக வெற்றி மனப்பாங்குடன் செல்வது அவசியம் என்றும் கூறியுள்ளார்.