ஆரஞ்சு கலரு ஆளு
ஐபிஎல் போட்டித்தொடர் முடிவடைந்ததும் அந்த சீசனுக்கான சிறப்பு விருதுகள் அளித்து கவுரவிக்கப்பட்டது. இதில் அதிக ரன் குவித்த விருது கொல்கத்தா அணியின் ராபின் உத்தப்பாவுக்கு சென்றது. டி20 பந்தையங்களில் தொடர்ந்து 10 ஆட்டங்களில் 40 ரன்களுக்கு மேல் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார் ராபின் உத்தப்பா. பைனலில் மட்டுமே அவர் சோபிக்க தவறிவிட்டார். இந்த சீசனில் ஐந்து அரை சதங்களுடன், 660 ரன்கள் எடுத்து, ஆரஞ்சு தொப்பியையும் தனதாக்கி கொண்டார். ஆரஞ்சு தொப்பி அணிந்திருக்கும் வீரர் இடம்பெற்றுள்ள அணி, கோப்பையை வென்றதில்லை என்ற நிலையையும் அவர் மாற்றியுள்ளார்.
ஊதா கலரு.. தொப்பி
சுனில் நரைன், புவனேஸ்வர் குமார் ஆகியோர் கடும் போட்டி கொடுத்த நிலையிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோகித் சர்மா அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். டி20 போட்டிகள், அதுவும் இந்திய பிட்சில் என்றால் பேட்ஸ்மேன்களுக்கு அல்வா சாப்பிட்டதுபோல இருக்கும். இதில் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தியது மிகப்பெரிய சாதனைதான். "23 விக்கெட் வீழ்த்திய மோகித் சர்மாவின் மன தைரியத்தை பாராட்டி அவருக்கு ஐபிஎல் கொடுத்த பரிசு ஊதா கலர் தொப்பி".
சிறந்த கத்துக்குட்டி வீரர்
இந்த சீசனுக்கான சிறந்த அறிமுக வீரராக அக்சர் பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணிக்காக விளையாடிய குஜராத்காரரான இவர், பேட்ஸ்மேன்களால் ரத்த ஆறு ஓடச்செய்யப்படும் டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு ஓவருக்கு சராசரியாக 6.13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து சாதித்துள்ளார். 17 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். சக வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான மேக்ஸ்வெல் கூட, உலகின் தலைசிறந்த ஸ்பின்னர் இவர்தான் என்று சான்று கொடுத்துவிட்டார்.
வளைச்சி வளைச்சி பிடித்த பொலார்ட்
சிறந்த கேட்சுக்கான விருதுக்கு தேர்வாளர்கள் மண்டையை பிய்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று. கிறிஸ் லைன் பிடித்த கேட்சும், பொலார்ட் கேட்சும் அதிகம் ஆராயப்பட்டன. இறுதியில் வளைச்சி பிடித்த அவார்ட்டை பொலார்ட் வளைத்து பிடித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் கூப்பர் லாங் ஆன் திசையில் சிக்சருக்கு தூக்கியடித்த பந்தை எல்லைக்கோட்டின் அருகில் இருந்து ஒரு கேட்ச் பிடித்த பொலார்ட், நிலைதடுமாறியதை உணர்ந்து மீண்டும் மேலே தூக்கி எறிந்துவிட்டு பவுண்டரி லைனுக்கு வெளியே சென்றார். பிறகு சுதாரித்துக் கொண்டு மைதானத்துக்குள் ஓடிவந்து தான் எறிந்த பந்து கீழே விழும் முன்பு மீண்டும் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். இந்த வீர சாகசத்துக்கு பரிசாக பொலார்ட் விருதை தட்டிச் சென்றார்.
குடுத்த காசுக்கு கூவியவர்
இந்த சீசனில் வொர்த்தான பிளேயர் என்ற விருதை பஞ்சாப் அணியின் கிளன் மேக்ஸ்வெல் பறித்து சென்றார். இவருக்கும் சென்னை வீரர் டிவைன் ஸ்மித்துக்கும் கடும் போட்டி இருந்த நிலையில், 36 சிக்சுடன் 552 ரன்கள் குவித்து ஒரு விக்கெட்டும் வீழ்த்தியதால் மேக்ஸ்வெல்லுக்கு இந்த விருது கொடுக்கப்பட்டது. அதிகப்படியான சிக்சருக்கான விருதும் மேக்ஸ்வெல்லுக்குதான். கொடுத்த காசுக்கு நல்லா கூவியுள்ளார் மேக்ஸ்வெல்.
இந்த பையன் ரொம்ப சமத்து
'கேப்டன் கூல்' மகேந்திரசிங் டோணியின் அணியும் எப்போதுமே ரொம்ப கூல்தான். தரையில் விழுந்து உருளுவது, சட்டையை கழற்றி சுற்றுவது, எதிரணி வீரரை பார்த்து வசைமாரி பொழிவது போன்ற கெட்டப்பயல் சேட்டையெல்லாம் சென்னை வீரர்கள் செய்வது கிடையாது. நாங்கதான் கிங் என்பதுபோல ஜென்டில்மேனாக நடந்துகொள்ளுவது சென்னை வீரர்கள் வாடிக்கை. இதனால்தான் இந்த விருது சென்னைக்கு கிடைத்துள்ளது. ஐபிஎல் 7 சீசன்களில் 5 முறை சென்னைதான் சமத்துபையன் விருது வாங்கியுள்ளதில் இருந்தே மற்ற அணிகள் எப்படி சேட்டை செய்திருக்கும் என்பதை புரிந்துகொள்ளலாம்.