துபாய்: "இதோ வந்துட்டேன்"-ன்னு ஐபிஎல்-ல் மறுபடியும் வேலையைக் காட்ட ஆரம்பிச்சுருக்காப்ல கொரோனா. இது எங்க போய் முடியப் போகுதோ தெரியல!
ஐபிஎல் 2021 தொடரை ஒருவழியாக படாதபாடு பட்டு, எல்லா கிரிக்கெட் நிர்வாகங்களிடம் பேசி, மன்றாடி வீரர்களை விளையாட வைக்க ஒப்புக் கொள்ள வைத்து, மூச்சு திணறி, நாக்குத் தள்ளி அமீரகத்தில் கடந்த செப்.19ம் தேதி தொடங்கி நடத்தி வருகிறது பிசிசிஐ.
இதில், இப்போது "குறுக்க இந்த கவுஷிக் வந்தா" என்பது போல், தமிழக வீரர் நடராஜன் மூலமாக ஐபிஎல் தொடரில் நுழைந்துள்ளது கொரோனா.
இன்று இரவு துபாயில் நடைபெறவுள்ள போட்டியில் நடராஜன் பங்கேற்கவிருந்த சன் ரைசர்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. நடராஜனுக்கு நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். தொடர்ந்து அவருடன் நெருக்கமாக இருந்த மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் உட்பட 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். பிறகு, இவர்கள் 6 பேருக்கும் இன்று காலை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அனைவருக்கும் 'நெகட்டிவ்' என்று இன்று பிற்பகல் ரிசல்ட் வெளியானது. இதனால், திட்டமிட்டப்படி இன்றைய போட்டி நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இங்கு தான் பிரச்சனையே!. விஜய் சங்கர் உட்பட ஆறு பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று, இன்று ரிசல்ட் வெளியாகியிருக்கிறது என்பது வாஸ்தவம் தான். ஆனால், கொரோனா வைரஸை பொருத்தவரை, அது மூன்று நாட்களுக்கு உடலில் எந்தவித சிக்னலும் கொடுக்காமல் சப்தம் போடாமல் இருந்து, அதன் பிறகே வேலையைக் காட்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அப்படி இருக்கையில், இன்று ரிசல்ட் நெகட்டிவ் வந்துவிட்டது என்பதற்காக, அந்த 6 பேரில் ஒருவரான விஜய் ஷங்கர் இன்றைய போட்டியில் விளையாடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு இன்னும் இரண்டு நாட்கள் கழித்து கொரோனா இருப்பது உறுதியானால் என்ன செய்வது?
அவர் இன்றைய போட்டியில் விளையாடினால், அணியில் உள்ள அனைத்து வீரர்களுடன் நெருங்கி இருக்க நேரிடும். விக்கெட் விழுந்தால் கட்டிப்பிடித்து கொண்டாட நேரிடும். இவ்வளவு ஏன்.. சமயத்தில் அம்பயர்களிடம் கூட நெருக்கமாக இருக்க நேரிடும். அப்படியெனில், இவர்கள் அனைவரின் நிலை என்னவாவது? இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு அன்று காலை, இந்தியாவின் பிஸியோ தெரபிஸ்ட்டுக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இந்திய வீரர்கள் பலர் அவரிடம் நெருக்கமாக இருந்ததால், போட்டியில் களமிறங்கி விளையாட அச்சம் தெரிவித்து பின்வாங்கியது இந்திய அணி. அதற்கு இந்திய அணி தரப்பில், "பிஸியோவுடன் நெருக்கமாக இருந்த வீரர்கள் இந்த போட்டியில் விளையாடினால், மற்ற வீரர்களும் அதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது" என்று காரணம் சொல்லப்பட்டது. இத்தனைக்கும் அனைத்து இந்திய வீரர்கள் கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. அப்படியிருந்தும், இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
இப்போது, அதே காட்சி, அப்படியே ஐபிஎல் தொடரில் பிரதிபலித்துள்ளது. நடராஜனுக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியாக, மற்றவர்களுக்கு நெகட்டிவ் என்றே முடிவு வந்துள்ளது. ஆனால், இப்போது இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட முடிவு போல், போட்டி நிறுத்தப்படவில்லை. இன்று திட்டமிட்டப்படி நடக்கிறது. அப்படியெனில், சர்வதேச கிரிக்கெட்டில் கொரோனா ஏற்பட்ட போது போட்டியே ரத்து செய்யப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் மட்டும் ஏன் இந்த போட்டி ரத்து செய்யப்படவில்லை? அல்லது ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படவில்லை. சர்வதேச போட்டியில் கொரோனா வந்தால் இரத்தம்.. ஐபிஎல்-ல் வந்தால் தக்காளி சட்னியா?