தலைவர் அசாருதீன்
முன்னாள் இந்திய அணி கேப்டன் முகமது அசாருதீன், தற்போது ஹைதராபாத் மாநில கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருக்கிறார். அவரது கிரிக்கெட் வாழ்வில் சர்ச்சைகள் இல்லாமல் இருக்காது என்பதை நிரூபிப்பது போல, அவர் மீது எதிர்பாராதவிதமாக அவுரங்கபாத் நகரத்தை சேர்ந்த டிராவல் ஏஜென்ட் புகார் அளித்துள்ளார்.
20.96 லட்சம் மதிப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும், அவுரங்கபாத் நகரத்தில் டேனிஷ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஷதாப்பிடம், அசாருதீனின் தனிப்பட்ட உதவியாளர் முஜிப் கான் 20.96 லட்சம் பெறுமானமுள்ள பல சர்வதேச விமான டிக்கெட்டுக்களை வாங்கியதாக கூறப்படுகிறது.
பணம் அளிக்கவில்லை
இந்த டிக்கெட்டுக்கள் அசாருதீன் மற்றும் சிலருக்காக நவம்பர் மாதத்தில் வாங்கப்பட்டுள்ளது என்றும், அதற்கு இதுவரை பணம் அளிக்கவில்லை என்றும் கூறி புகார் அளித்துள்ளார் அந்த டிராவல் நிறுவனத்தின் உரிமையாளர் ஷதாப். மேலும், பல தகவல்களையும் அவர் கூறி உள்ளார்.
10.6 லட்சம் வந்ததா?
ஷதாப் பணம் கேட்ட போது முஜிப் கான் ஆன்லைனில் பணம் செலுத்துவதாக வாக்களித்ததாகவும், ஷதாப்பின் உதவியாளர் சுதேஷ் அவாக்கல், 10.6 லட்சம் பணத்தை அனுப்பியதாக ஈ-மெயில் அனுப்பியதாகவும், ஆனால், அப்படி எந்த பணமும் தனக்கு வந்து சேரவில்லை எனவும் கூறி உள்ளார் ஷதாப்.
செக் அனுப்பவில்லை
நவம்பர் மாதம் செக் அனுப்பியது போல புகைப்படம் எடுத்து வாட்சப்பில் அனுப்பியதாகவும், அப்படி செக் எதுவும் தன்னிடம் அளிக்கப்படவில்லை என்றும் புகார் அளித்துள்ளார் ஷதாப். இது தொடர்பான எஃப்.ஐ.ஆர் அவுரங்கபாத் நகர காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது.
சட்டப்பிரிவு
அதில் முகமது அசாருதீன், முஜிப் கான், அவாக்கல் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் உள்ள பிரிவு 420 (மோசடி), 406 ( நம்பிக்கையை மீறுதல்) மற்றும் 34 (பொதுவான நோக்கம்) ஆகியவற்றின் கீழ் புகார் பதியப்பட்டுள்ளது. இந்த புகாரை முற்றிலுமாக மறுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் முகமது அசாருதீன்.
|
அசாருதீன் பதிலடி
அசாருதீன் கூறுகையில், "இந்த புகாரில் எந்த உண்மையும் இல்லை. இது வெறும் புகழ் வெளிச்சத்துக்காக அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. நான் இது தொடர்பாக சட்ட ரீதியான ஆலோசனை பெற்று, புகார் அளித்தவர் மீது 100 கோடி ரூபாய் அளவுக்கு மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன்" என கூறினார்.
தொடர்பு கொள்ளவில்லை
இந்த புகாரில் அசாருதீன் உதவியாளர் முஜிப் கான் மற்றும் அவரின் உதவியாளர் அவாக்கல் ஆகியோருடன் மட்டுமே ஷதாப் தொடர்பு கொண்டுள்ளதும் தெரிகிறது. அசாருதீன் பதிலடி கொடுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளது.