1984 ஆசிய கோப்பை ஆரம்பம்
முதல் ஆசிய கோப்பை தொடர் 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 6 முதல் 13 வரை நடந்தது. ஒருநாள் போட்டிகளாக நடந்த இந்த புதிய தொடரில், மூன்று ஆசிய நாடுகள் மட்டுமே பங்கேற்றன. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் ரவுண்டு ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு ஒரு முறை மோதின. இதில் வெல்லும் அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்.
மூன்றே போட்டிகள்
அரையிறுதி, இறுதிப் போட்டி, இதெல்லாம் அப்போது இல்லை. யார் அதிகப் புள்ளிகள் பெறுகிறார்களோ அவர்கள் கோப்பையை வெல்வார்கள். இந்த ரவுண்டு ராபின் முறை தொடரில் மொத்தமே மூன்று போட்டிகள் தான். முதல் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் மோதின.
இலங்கையை வீழ்த்திய இந்தியா
முதல் போட்டியில், இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அடுத்து இலங்கை, இந்தியா போட்டி. அதில், இலங்கை இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 41 ஓவர்களில், 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் சுரிந்தர் கண்ணா 51 ரன்கள் மற்றும் பார்கர் 32 ரன்கள் அடித்து 22வது ஓவருக்குள் 97 ரன்கள் இலக்கை அடைந்தனர். இந்தியாவை எளிதாக வெற்றி அடைய வைத்தனர்.
கவாஸ்கர் எவ்வளவு அடித்தார் தெரியுமா?
மூன்றாவதாக இந்தியா, பாகிஸ்தான் மோதின. இந்த போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய இந்தியா 188 ரன்கள் எடுத்தது. சுரிந்தர் கண்ணா மீண்டும் ஒரு அரைசதம் அடித்தார். இந்த போட்டியில் தற்போதுள்ள ரசிகர்களுக்கும் அறிமுகமான வெங்க்சர்கார் 14, சந்தீப் பாட்டீல் 43, கவாஸ்கர் 36* ரன்கள் எடுத்தனர்.
பாகிஸ்தானில் 4 ரன் அவுட்
அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 40 ஓவரில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த போட்டியில் பாகிஸ்தானின் 4 வீரர்கள் ரன் அவுட் ஆனார்கள். அதுவே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. ரவி சாஸ்திரி 3, ரோஜர் பின்னி 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
முதல் ஆசிய கோப்பை வென்ற இந்தியா
இரண்டு போட்டிகளை வென்ற இந்தியா தொடரை வென்றது. இரண்டாம் இடத்தை இலங்கை ஒரு வெற்றியுடன் பிடித்தது. பாகிஸ்தான் ஒரு வெற்றியும் பெறாமல் ஏமாற்றம் அடைந்தது. இந்த தொடரின் சிறந்த வீரர் விருது இரண்டு அரைசதம் அடித்த இந்தியாவின் சுரிந்தர் கண்ணாவுக்கு கிடைத்தது.