விரைவில் தேதி, இடம் அறிவிப்பு
ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த தொடரை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முனைப்பு காட்டி வருகிறது. இதற்கான தேதி மற்றும் இடம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான ஏலம் சென்னையில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
சென்னையில் அணிகள் முகாம்
சென்னையில் பிற்பகல் 3 மணியளவில் இந்த ஏலம் துவங்கி நடைபெறவுள்ளது. இதற்காக 8 ஐபிஎல் அணிகளும் சென்னையில் முகாமிட்டுள்ளன. முன்னதாக இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக சில வீரர்களை தக்கவைத்தும் சில வீரர்களை விடுவித்தும் அணிகள் அறிவித்துள்ளன. இதன்மூலம் ஏலத்திற்காக கணிசமான தொகையுடன் அணிகள் காத்திருக்கின்றன.
ஏலத்தையொட்டி பாதுகாப்பு
சென்னையில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. ஏலத்தில் பங்குபெற குறிப்பிட்ட நபர்களுக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதல் வீரர் ஆரோன் பின்ச்
இந்த ஏலத்தில் வெளிநாட்டு வீரர்கள் உள்ளிட்ட 292 வீரர்கள் பங்கேற்கவுள்ள நிலையில் ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் முதல் வீரராக ஏலத்தில் விடப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மாக்ஸ்வெல், கேதார் ஜாதவ் மற்றும் டேவிட் மலன் உள்ளிட்ட முக்கிய வீரர்களும் ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர்.