முதல்கட்ட வாக்குப்பதிவு
ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்பட்டு 18ம் தேதிக்குள் நாமினேஷன் தாக்கல் செய்ய ஒரு வாரத்திற்கும் குறைவான அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவில் யார் முன்னிலை என்பது உள்ளிட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
டிசம்பருக்குள் தேர்வு
மூன்று கட்டங்களில் இந்த வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் டிசம்பர் மாதத்திற்குள் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் நிறைவுபெறும் என்றும் ஐசிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று கட்டங்களில் யாருக்கும் முன்னிலை கிடைக்காத பட்சத்தில் தற்போதுள்ள இடைக்கால தலைவரே தன்னுடைய பதவியில் நீடிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
யாருக்கும் பெரும்பான்மை இல்லை
நியூசிலாந்தை சேர்ந்த கிரெக் பார்க்ளே மற்றும் எந்த நாட்டையும் பிரதிபலிக்காத இம்ரான் குவாஜா ஆகியோர் ஐசிசி தலைவர் பதவிக்காக போட்டியிடும் நிலையில் நேற்றைய வாக்குப்பதிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 2க்குள் நடைபெறும்
ஐசிசியில் 16 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் 12 முழு உறுப்பினர்கள், ஒரு சார்பற்ற பெண் உறுப்பினர் மற்றும் 3 துணை உறுப்பினர்கள் உள்ளன. துணை உறுப்பினர்களாக ஸ்காட்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் உள்ளன. இதனிடையே, டிசம்பர் 2ம் தேதிக்குள் 3 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்தேறும் என்று கூறப்பட்டுள்ளது.