சிட்னி: பிலிப் ஹியூக்ஸ் மரணத்தால் அதிர்ச்சியிலுள்ள ஆஸ்திரேலிய வீரர்களால் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆட முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே டெஸ்ட் போட்டி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெபீல்டு ஷீல்டு போட்டியில், தெற்கு ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதும் 4 நாள் ஆட்டம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வந்தது. டாசில் வென்ற தெற்கு ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது.
அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்திருந்த நிலையில் (48.3 ஓவர்), சீன் அப்பாட் வீசிய அதிவேக பவுன்சர் பந்து, பேட்ஸ்மேன் பிலிப் ஹியூஸ் (25 வயது) தலையில் பலமாகத் தாக்கியது. ஹெல்மெட் அணிந்திருந்தாலும், படுகாயம் அடைந்த ஹியூஸ் களத்திலேயே சுருண்டு விழுந்தார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் இறந்தார்.
இந்நிலையில் டிசம்பர் 4ம்தேதி இந்தியாவுக்கு எதிராக தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் ஹட்டின், டேவிட் வார்னர், ஷேன் வாட்சன், நேதன் லையன் ஆகியோரும் சம்பவம் நடந்தபோது அந்த போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தனர். தங்கள் கண்முன்னே நடந்த சோகத்தை மறக்க முடியாமல் அவர்கள் மனமுடைந்துபோய் உள்ளனர்.
எனவே இந்தியாவுக்கு எதிராக தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் முழு மன தகுதியுடன் அவர்கள் விளையாட முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே முதல் டெஸ்ட் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆஸ்திரேலிய வீரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முன்னாள் வீரர் ஆலன்பார்டர் கூறுகையில், வீரர்களின் கருத்துப்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின் கூறுகையில், இப்போதுள்ள சூழ்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியை தள்ளி வைப்பதே சரியாக இருக்கும் என்றார்.