டெஸ்ட் சாம்பியன்ஷிப்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் விதிமுறைப்படி வங்கதேச அணி, பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே டெஸ்ட் தொடரில் ஆட வேண்டும். ஆனால், பாதுகாப்பு காரணங்கள் வங்கதேச அணியை பயமுறுத்தியது.
வாதம் செய்த அணிகள்
அதனால், கடந்த மூன்று மாதங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு - வங்கதேச கிரிக்கெட் போர்டு இடையே பனிப்போர் நடந்து, இரு தரப்பும் ஊடகங்களில் தங்கள் தரப்பு நியாயத்தை கூறி வாதிட்டு வந்தனர்.
பாகிஸ்தான் வற்புறுத்தல்
வங்கதேசம் பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகம் போன்ற இடத்தில் கிரிக்கெட் தொடர் ஆட சம்மதம் தெரிவித்தது. ஆனால், பாகிஸ்தான் தங்கள் நாட்டில் தான் ஆட வேண்டும் என வற்புறுத்தியது.
இலங்கை அளித்த நம்பிக்கை
சமீபத்தில் இலங்கை அணி இரண்டு பிரிவாக பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இன்றி வெற்றிகரமாக ஆடி முடித்தது. அந்த நம்பிக்கையில், வங்கதேசம் எளிதாக பாகிஸ்தான் வர ஒப்புக் கொள்ளும் என எண்ணியது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு.
வீரர்கள் மறுப்பு
ஆனால், வங்கதேச வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவில் இருக்கும் சிலர் தங்களால் பாகிஸ்தான் செல்ல முடியாது என மறுப்பு தெரிவித்ததால், வங்கதேச கிரிக்கெட் போர்டு சம்மதம் கூறாமல் தடுமாறி வந்தது.
புகார் அளிப்போம்
காரணம், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மிரட்டல் தான். வங்கதேசம் பாகிஸ்தான் வராவிட்டால், இருதரப்பு கிரிக்கெட் ஒப்பந்தத்தின் படி நடந்து கொள்ளவில்லை என ஐசிசியிடம் புகார் அளிப்போம் என கூறியது.
வங்கதேசம் ஒப்புதல்
இந்த நிலையில், சமீபத்தில் இரு நாட்டு கிரிக்கெட் போர்டு அதிகாரிகளும் பேசினர். அதன் முடிவில், மிகச் சிறிய அளவிலான கிரிக்கெட் தொடரில், இரண்டு பிரிவுகளாக ஆட வங்கதேசம் ஒப்புக் கொண்டது.
இரண்டு பிரிவுகள்
மூன்று டி20 போட்டிகள், ஒரே ஒரு ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட வங்கதேசம் ஒப்புக் கொண்டது. அதையும் இரண்டு பிரிவாகவே ஆட சம்மதம் கூறி இருந்தது.
தொடர் எப்போது?
டி20 தொடர் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி ஜனவரி 24 முதல் பிப்ரவரி 11 வரை நடைபெறும். மீதமுள்ள ஒரே ஒரு ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி ஏப்ரல் 3 முதல் 9 வரை நடைபெறும்.
எதிர்ப்பு உள்ளது
இந்த சிறிய தொடருக்கும் வங்கதேச வீரர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் பாகிஸ்தான் செல்ல மறுத்து இருக்கும் நிலையில், பயிற்சியாளர் குழுவில் ஐந்து நபர்கள் பாகிஸ்தான் செல்லப் போவதில்லை என கூறி உள்ளது வங்கதேச கிரிக்கெட் போர்டு.
யார் அந்த ஐவர்?
பேட்டிங் பயிற்சியாளர் நெய்ல் மெக்கென்சி, பீல்டிங் பயிற்சியாளர் ரியான் குக், சுழற் பந்துவீச்சு ஆலோசகர் டேனியல் வெட்டோரி, உடற்தகுதி நிபுணர் மரியோ, அணி ஆலோசகர் ஸ்ரீநிவாஸ் சந்திரசேகரன் என ஐந்து பேரும் பாகிஸ்தான் செல்ல மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. நடக்கும் சம்பவங்களை பார்த்தால், வெற்றி, தோல்வியை தாண்டி "சும்மானாச்சுக்கும்" பாகிஸ்தான் போய் கிரிக்கெட் ஆடி வர வங்கதேசம் முடிவு செய்துள்ளதாகவே தோன்றுகிறது.