2019 உலகக்கோப்பை குழப்பம்
சிறப்பாக சென்று கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் பெரிய குழப்பங்களுக்கு விதை போட்டது 2019 உலகக்கோப்பை தொடருக்கான அணித் தேர்வு. அப்போதைய கிரிக்கெட் போர்டில் இருந்த அரசியல் காரணமாக குளறுபடிகள் நடந்தன.
கேப்டன் மாற்றம்
நீண்ட காலமாக கேப்டனாக இருந்த அஸ்கார் ஆப்கன், உலகக்கோப்பை தொடருக்கு முன் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, குலாப்தின் நயிப் உலகக்கோப்பை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அணிக்குள் குழப்பம்
ஆப்கானிஸ்தான் அணி பெரிய அணிகளுக்கு சவால் விடுக்கும் என நினைத்த நிலையில், குலாப்தின் நயிப் தலைமையில் அந்த மிக மோசமாக செயல்பட்டு வந்தது. தொடரின் இடையே அணிக்குள் பல குழப்பங்கள் நடந்தேறின.
மீண்டும் மாற்றங்கள்
உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் கிரிக்கெட் போர்டில் மாற்றங்கள் செய்யப்பட்டது. அத்துடன் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்த நிலையில், மீண்டும் அஸ்கார் ஆப்கன் அணைத்து அணிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிரடி பதிவு
இந்த நிலையில், குலாப்தின் நயிப் பரபரப்பை கிளப்பும் வகையில் ட்விட்டரில் சில பதிவுகளை வெளியிட்டு கிரிக்கெட் உலகை அதிர வைத்தார். யாருடைய பெயரையும் குறிப்பிட்டு புகார் கூறாத அவர், பெயர்களை கூறி விடுவேன் என மிரட்டும் வகையில் பதிவிட்டுள்ளார்.
ஊழல், ஏமாற்று வேலை
அவருடைய பதிவு - இனிய ஆப்கன் மக்களே, ஒரு வீரர் மீதோ, போர்டு மீதோ உள்ள தனிப்பட்ட வெறுப்பு காரணமாக இதை நான் பொதுவெளியில் கூறவில்லை. இந்த தேசம் மற்றும் மக்களுக்கு எதிராக, (கிரிக்கெட்டில்) ஊழல், மோசமான செயல்கள், துரோகம் ஆகியவற்றை செய்து வரும் ஒவ்வொருவரையும் பற்றியும் நான் வெளிப்படுத்தப் போகிறேன்.
மாபியா வட்டம்
இந்த மாபியா வட்டம் அல்லது நபர்களை பற்றி நான் முன்பே ஏன் பேசவில்லை என உங்களில் பலர் என்னை கேட்கலாம். அதிகாரவர்க்கம் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் கிரிக்கெட் அணியில் நிலவும் குழப்பத்தை தீர்த்து வைப்போம், உடனடி மாற்றம் மற்றும் இந்த வட்டத்தை தடை செய்வோம் என்று எனக்கு வாக்களித்தார்கள்.
உயர்மட்ட அரசு அதிகாரிகள்
இதே வட்டத்துக்கு உயர்மட்ட அரசு அதிகாரிகளுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கிரிக்கெட் போர்டு மற்றும் அணி நிர்வாகத்தில் அதிக ஆதிக்கம் உள்ளது. சிலர் மிக வெளிப்படையாகவே உலகக்கோப்பை தொடரில் நான் கேப்டன் என்பதால் சரியாக விளையாடவில்லை என ஒப்புக் கொண்டார்கள்.
|
நடவடிக்கை
அந்த துரோகத்திற்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? பொது நலன் கருதி, அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நான் ஒவ்வொருவரையும், அரசு அதிகாரிகள் முதல் போர்டு உறுப்பினர்கள் வரை, வீரர்கள், முன்னாள் போர்டு அதிகாரிகள் என அனைவரின் பெயரைக் கூறி, அவர்கள் செய்த இழி செயலை பதில் வெளிப்படுத்துவேன். இவ்வாறு கூறி இருக்கிறார் குலாப்தின் நயிப்.
பதில் என்ன?
இந்த பதிவுகளுக்குப் பின் நயிப் இதுவரை எதுவும் விளக்கம் கூறவில்லை. அதே போல, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களோ, நிர்வாகமோ இதுவரை வாய் திறக்கவில்லை. கேப்டன் பதவி பறிபோனதால் இப்படி மிரட்டல் விடுக்கிறாரா? அல்லது வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் அதிர வைக்கும் ரகசியங்களை கூறப் போகிறாரா? நயிப் தான் பதில் சொல்ல வேண்டும்.