படுதோல்வி அடைந்த பாகிஸ்தான்
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்துள்ள டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் 2க்கு 0 மற்றும் 3க்கு 0 என்ற கணக்கில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்துள்ளது.
பாகிஸ்தான் ரசிகர்கள் அதிருப்தி
ஆஸ்திரேலியாவுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய பாகிஸ்தான் இரண்டு போட்டிகளிலும் இன்னிங்க்ஸ் தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் ரசிகர்கள் கடுமையான அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.
டக் அவுட்டான இமாம்-அல்-ஹக்
அடிலெய்டில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்க்ஸ் தோல்வி அடைந்துள்ளது. இதில் விளையாடிய அந்நாட்டு பேட்ஸ்மேன் இமாம்-அல்-ஹக் முதல் இன்னிங்சில் 2 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் டக் அவுட்டும் ஆகி மொத்தமாக இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 2 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.
|
சிரிப்புடன் கூடிய புகைப்படம் வெளியீடு
இந்தப் போட்டி நிறைவுற்ற நிலையில் பாகிஸ்தான் இடதுகை ஆட்டக்காரர் இமாம்-அல்-ஹக், ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருடன் சேர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்த புகைப்படம் வெளியானது. இதை வெளியிட்ட அந்நாட்டு ரசிகர், வெட்கமில்லாமல் இமாம் சிரித்துக் கொண்டிருப்பதாக விமர்சித்திருந்தார்.
விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும்
ரசிகர் வெளியிட்ட இந்த டிவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இமாமிற்கு ஆதரவாகவும் எதிர்த்தும் பல்வேறு கமெண்ட்டுகள் வெளியாகின. விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்று பலர் கமெண்ட் செய்துள்ளனர்.
|
"விளையாட்டு பற்றிதான் பேசியிருப்பார்கள்"
இதனிடையே, விளையாட்டு பற்றிதான் இருவரும் பேசியிருப்பார்கள் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் கில்லஸ்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பேசியுள்ள அவர், அவர்களுக்கிடையிலான உரையாடல், அவர்கள் இருவருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.