சிறந்த கேப்டன்
மஷ்ராபே மொர்டாசா வங்கதேச அணியின் கேப்டனாக நீண்ட காலம் சிறப்பாக செயல்பட்டார். அவரது காலத்தில் தான் வங்கதேச அணியை கண்டு எதிரணிகள் அச்சம் கொள்ளத் துவங்கின. வங்கதேச கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய கேப்டன் என்றும் பெயர் பெற்றவர்.
தீவிர அரசியல்
மஷ்ராபே மொர்டாசா 36 டெஸ்ட் போட்டிகள், 220 ஒருநாள் போட்டிகள், 54 டி20 போட்டிகள் ஆடி உள்ளார். கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டார். தேர்தலில் நின்று பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டார்.
பல்வேறு உதவிகள்
இந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்து இருந்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர் தன் சொந்த ஊரிலும், தன் தொகுதியிலும் பல்வேறு உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காய்ச்சலால் அவதி
முன்னதாக அவரது குடும்பத்தில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. மஷ்ராபே மொர்டாசா கடந்த இரு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தற்போது அவர் வீட்டில் தனிமையில் இருக்கிறார்.
நபீஸ் இக்பால்
முன்னாள் வீரர் நபீஸ் இக்பாலுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது, அவர் தற்போதைய வங்கதேச ஒருநாள் அணி கேப்டன் தமிம் இக்பாலின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு வங்கதேசத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரசிகர்கள் அதிர்ச்சி
மேலும், கிரிக்கெட் உலகில் முக்கிய வீரர்களில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடிக்கு பின் பாதிக்கப்பட்ட முக்கிய வீரர் மஷ்ராபே மொர்டாசா ஆவார். வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவில் சிக்கி வரும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.