கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பந்தை கேட்ச் பிடிக்கையில் காயம் அடைந்த 20 வயது வீரர் பலியானார்.
மேற்கு வங்க மாநிலத்தின் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அங்கித் கேஷ்ரி(20). கடந்த 17ம் தேதி கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் மைதானத்தில் கிழக்கு பெங்கால் மற்றும் பொவானிபூர் கிளப் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 12வது ஆளாக இருந்தார் அங்கித் கேஷ்ரி. கிழக்கு பெங்கால் அணியில் விளையாடிய அர்னாப் நந்தி பிரேக் எடுத்தார்.
இதையடுத்து அர்னாபுக்கு பதில் கேஷ்ரி மைதானத்திற்குள் வந்தார். அப்போது கிழக்கு பெங்கால் அணி ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தது. எதிரணி பேட்ஸ்மேன் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க கேஷ்ரி ஓடினார். அந்த பந்தை பந்துவீச்சாளர் சவ்ரவ் மோண்டலும் கேட்ச் பிடிக்க ஓடினார். இதில் கேஷ்ரியும், மோண்டலும் பலமாக மோதிக் கொண்டனர்.
மோண்டலின் முழங்கால் கேஷ்ரியின் கழுத்து மற்றும் தலையில் பட்டது. இதையடுத்து ரத்தம் கக்கி கேஷ்ரி மயக்கம் அடைந்தார். மைதானத்திலேயே முதலுதவி அளித்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரின் உடல் நலம் தேறி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கேஷ்ரியின் நிலைமை மோசமானது. இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். முன்னதாக கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹ்யூக்ஸ் தலையில் பந்துபட்டதால் படுகாயம் அடைந்து பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.