சென்னை: தற்போது உலக கோப்பையில் விளையாடும் பாகிஸ்தானை, இந்தியா எப்போது விளையாடினாலும் ஜெயிக்கும் திறன் கொண்டது என்று ஜாம்பவான் கபில்தேவ் கூறியிருக்கிறார்.
வந்தேவிட்டது...இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உலக கோப்பை தொடரில் மோதிக் கொள்ளும் ஆட்டம். யார் வெல்வார்... யார் அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுப்பார் என்று ஆரூடங்கள் வந்து குவிய ஆரம்பித்துவிட்டன. இந்த முறையும் பாகிஸ்தான், இந்தியாவிடம் தோற்று போகும் என்று ரசிகர்கள் கெத்தாக வலம் வர ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானை தற்போதைய இந்திய அணி பலமுறை வெல்லும் திறன் படைத்தது என்று ஜாம்பவான் கபில்தேவ் தெரிவித்துள்ளார். சென்னையில் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் பேட் அறிமுகம் செய்யும் விழாவில் அவர் கலந்து கொண்டார்.
IND Vs PAK: உலக கோப்பையில் மறக்க முடியாத இந்தியா Vs பாகிஸ்தான் போட்டிகள்...!! ஒரு ப்ளாஷ்பேக்...!!
அப்போது கபில்தேவ் பேசியதாவது: தற்போதைய இந்திய அணி மிகவும் அபாரமானது. நிறைய இளம் வீரர்கள் துடிப்புடன் இருக்கும் அணி. அந்த அணி, பாகிஸ்தானை பல முறை வெல்லும். இந்தியன் என்பதால் நான் இதை கூற வில்லை.
நான் விளையாடிய காலத்தில் காணப்பட்ட பாகிஸ்தான் அணி சிறப்பான அணி. ஆனால்... இப்போதோ நிலைமை வேறாக இருக்கிறது. இரு அணிகளும் தற்போது, 10 முறை ஆடினால் 7 முறை இந்தியா வென்று விடும். அப்படித்தான் இருக்கிறது இப்போதைய நிலைமை.
இந்திய அணியில் பல ஆண்டு கால தேடுதல், போராட்டங்களுக்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. பும்ரா உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார். முதலில் அவரை பார்த்தபோது, சரியாக வீச மாட்டார் என்று கருதினேன்.
ஆனால்.... இப்போது அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டிருக்கிறேன். கோலி நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உள்ளார். அவரது தலைமையையும், எனது தலைமையையும் ஒப்பிட முடியாது. தோனி ராணுவ அடையாளம் பதித்த கையுறைகளை அணிந்ததில் தவறு எஇல்லை. நாடு, ராணுவத்தினர் மீதான அபிமானத்தால் அவர் அந்த கையுறைகளை அணிந்தார் என்றார்.