இந்திய அணி
இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதை அடுத்து இந்திய அணி மீதான மதிப்பு உயர்ந்துள்ளது. அடுத்து இங்கிலாந்து அணி, இந்தியாவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. வலுவான நிலையில் இருக்கும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமான காரியம் என்பதால் இங்கிலாந்து அணி திட்டமிட்டு செயல்பட வேண்டிய நிலையில் உள்ளது.
மூன்று வீரர்கள்
தற்போது இங்கிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று உள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியா வர உள்ள நிலையில், அந்த டெஸ்ட் தொடரில் ஆடும் மூன்று வீரர்களுக்கு ஓய்வு அளித்துள்ளது. அந்த மூவர் - ஜானி பேர்ஸ்டோ, மார்க் வுட், சாம் கர்ரன்.
விமர்சனம்
இவர்கள் மூவருமே நல்ல பார்மில் உள்ளனர். அதிலும் பேர்ஸ்டோ சுழற் பந்துவீச்சை சமாளித்து ஆடுவதில் வல்லவர். அவருக்கும் ஓய்வு கொடுத்துள்ளது நாசிர் ஹுசைன், மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் இங்கிலாந்து கேப்டன்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஏன் இப்படி?
அவர்கள் இந்த முடிவை கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்றனர். மறுபுறம், இலங்கை தொடரில் பங்கேற்காத பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ரோரி பர்ன்ஸ்-ஐ அணியில் சேர்த்துள்ளது இங்கிலாந்து அணி. வீரர்களுக்கு சுழற்சி ஓய்வு அளிக்கவே இந்த முடிவு என்றாலும், இந்திய அணியை வீழ்த்த முழு பலத்துடன் இங்கிலாந்து அணி களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.