பரபரப்பு
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளராக இருந்த முகமது அமீர் கடந்த 2020, டிசம்பர் மாதம் தீடீரென தனது ஓய்வை அறிவித்தார். அவர் தனக்கு, பாகிஸ்தான் அணியில் சரியான மரியாதை கிடைக்கவில்லை. நிர்வாகம் மன ரீதியாக தனக்கு கொடுத்த அழுத்தமே நான் ஓய்வு பெற காரணம் என பரபரப்பை கிளப்பினார்.
பாகிஸ்தான் தேர்வு முறை
இந்நிலையில் தற்போது நேராக பாகிஸ்தானின் வீரர்கள் தேர்வு முறையை சாடியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பாகிஸ்தான் தேர்வர்கள், அணியின் இளம் வீரர்கள் நேரடியாக சர்வதேச போட்டிகளில் வந்து கற்றுக்கொண்டு சிறப்பாக விளையாட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். சர்வதேச போட்டிகள் என்பது கற்றுக்கொள்ள வந்த பள்ளிக்கூடம் கிடையாது. அங்கு ஆட்டத்தை பற்றி நன்கு அறிந்த, சிறந்த திறமை கொண்ட வீரர்களே இருக்க வேண்டும்.
கற்க வேண்டும்
இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளின் சர்வதேச வீரர்கள் தேர்வை பாருங்கள். அவர்கள் நீண்ட காலம் உள்நாட்டு போட்டிகளில் விளையாடிவிட்டு, கடினமான சூழல்களை கையாண்ட பிறகு சர்வதேச போட்டிகளில் கால்தடம் பதிக்கிறார்கள். உள்நாட்டு தொடர்கள் அவர்களுக்கு சிறந்த பாடங்களை கற்றுக்கொடுக்கிறது.
இந்திய வீரர்கள் உதாரணம்
உதாரணத்திற்கு இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், க்ருணால் பாண்டியா ஆகியோரை கூறலாம். அவர்கள் சர்வதேச போட்டியில் அறிமுகமானபோது அருமையாக தயாராகியிருந்தனர். அவர்களுக்கு அவ்வளவு அதிகமான ஆலோசனைகளும், பயிற்சிகளும் தேவைப்படவில்லை. நீண்ட நாட்கள் உள்நாட்டு போட்டிகளில் ஆடியதால், சர்வதேச அறிமுகம் சிறப்பாக இருந்தது.
அழுத்தங்கள்
பாகிஸ்தானில் இளம் வீரர்கள் வெகு விரைவாக சர்வதேச அணியில் வீசப்படுகின்றனர். இதனால் அவர்களின் ஆட்டத்தில் பெரும் பிரச்சினைகள் ஏற்படுகிறது. அவர்களுக்கு அழுத்தங்கள் ஏற்படுகிறது. அந்த முறை சரிபட்டு வராது என்பதை நாங்கள் உணர்ந்தோம். பாகிஸ்தான் அணி அதை மாற்றிக்கொள்ள வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.