வாழ்க்கை திரைப்படம்
இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன், எம்.எஸ். தோனி ஆகியோரின் வாழ்க்கை படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. தற்போது 4வது வீரராக சவுரவ் கங்குலியின் வாழ்க்கை திரைப்படம் உருவாகவுள்ளது. தனது வாழ்க்கை படங்கள் எடுப்பதற்கு நீண்ட காலமாக அனுமதி அளிக்காமல் இருந்த கங்குலி தற்போது திடீரென சம்மதம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில் படம் உருவாவதையும், படத்தினை தயாரிக்கப்போவது யார் என்பதையும் அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கங்குலி, கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை. அதுதான் எனக்கு நம்பிக்கையையும், திறணையும் அதிகரித்தது. எனது கிரிக்கெட் பயணம் மிகவும் அழகானது. அதனை லவ் ஃபில்ம்ஸ் திரைப்பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுடன் பயணிப்பதற்கு எதிர்நோக்கியுள்ளேன் எனக்கூறியுள்ளார்.
கதாநாயகன் யார்?
தயாரிப்பாளர் குறித்து தகவலை அறிவித்தாலும், கங்குலியாக திரையில் தோன்றவிருப்பது யார் என்பது குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால் இதுகுறித்து கசிந்துள்ள தகவலின் படி, திரைப்படத்தில் கங்குலியாக பாலிவுட் நடிகர் ரண்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை திரைப்படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். தற்போது கங்குலியாகவும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.
கதையின் வடிவம்
கங்குலியின் வாழ்க்கை திரைப்படம் சுமார் ரூ.200 முதல் ரூ.250 கோடி வரையிலான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் போட்டியில் கங்குலி சதமடித்தது முதல் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டது வரை கதை வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.