வாழ்கை திரைப்படம்
இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன், எம்.எஸ். தோனி ஆகியோரின் வாழ்கை படங்கள் வெளியாகியுள்ளன. தற்போது 4வது வீரராக சவுரவ் கங்குலியின் திரைப்படம் உருவாகவுள்ளது. தனது வாழ்கை படங்கள் எடுப்பதற்கு நீண்ட காலமாக அனுமதி அளிக்காமல் இருந்த கங்குலி தற்போது திடீரென சம்மதம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
கங்குலியின் அறிவிப்பு
இதுகுறித்து பேசியுள்ள அவர், எனது வாழ்கை கதையை திரைப்படமாக எடுக்க ஒப்புதல் வழங்கியுள்ளேன். இத்திரைப்படம் இந்தி மொழியில் உருவாகவுள்ளது. ஆனால் தற்போதைக்கு படத்தின் இயக்குநர் யார், நடிகர் யார் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்க மாட்டேன். இன்னும் சிறிது நாட்களில் அனைத்தையும் உறுதி செய்துவிட்டு விவரங்களை வெளியிடுகிறேன் எனக்கூறியுள்ளார்.
கதாநாயகன் யார்?
ஆனால் இதுகுறித்து கசிந்துள்ள தகவலின் படி, திரைப்படத்தில் கங்குலியாக பாலிவுட் நடிகர் ரண்பீர் கப்பூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்கை திரைப்படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். தற்போது கங்குலியாகவும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. வியாகாம் நிறுவனம் திரைப்படத்தின் தயாரிப்பு உரிமையை பெற்றுள்ளது.
கதையின் வடிவம்
கங்குலியின் வாழ்கை திரைப்படம் சுமார் ரூ.200 முதல் ரூ.250 கோடி வரையிலான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் போட்டியில் கங்குலி சதமடித்தது முதல் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டது வரை கதை வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படவுள்ளது.