பஞ்சாப்: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
2007-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளின் உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக இருந்தவர் யுவராஜ் சிங்.
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற அதிரடி வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங், தனது முதல் குழந்தையை வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டுள்ள அவர், "கடவுள் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையை ஆசீர்வதித்துள்ளார் என்பதை ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இதற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் தனிபட்ட வாழ்கைக்கு நீங்கள் மதிப்பு கொடுப்பீர்கள் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் நடிகை ஹேசல் கீச் 2016-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதியன்று பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துக்கொண்டனர். 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜோடி தங்களது முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த யுவராஜ் சிங், தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இறுதியில் கடந்த 2019ம் ஆண்டு அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக வீடியோ மூலம் அறிவித்தார். அவர் உருக்கமாக பேசிய வீடியோ ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.