222 ரன்கள் இலக்கு
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 4வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 222 ரன்களை இலக்காக அளித்தது. கடினமான இலக்கு என்றாலும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனி வீரராக சதமடித்து வெற்றியை நோக்கி அணியை வழிநடத்தினார்.
பஞ்சாப் கிங்ஸ் வெற்றி
ஆயினும் அவருடைய முயற்சி வீணானது. இறுதி ஓவரில் ரன்களை சுருக்கி பஞ்சாப் அணி அபார வெற்றி கொண்டது. இந்நிலையில் இறுதி பந்திற்கு முன்னதாக மோரீசின் சிங்கிளுக்கான அழைப்பை மறுத்து தானே இறுதி பந்தை எதிர்கொள்ள தயாரானார் சஞ்சு சாம்சன். அவரின் இந்த முடிவு பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
|
சஞ்சய் மஞ்ச்ரேகர் ட்வீட்
சாம்சன் சிக்ஸ் அடிக்க அதிக வாய்ப்புகள் இருந்தததாகவும் சாம்சன் சரியான முடிவையே அந்த நேரத்தில் எடுத்ததாகவும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதே கருத்தையே முன்னாள் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்னேகல் பிரதானும் தெரிவித்துள்ளார். ஆனால் சாம்சன் ஒரு பவுண்டரியாவது அடித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சங்ககாரா கருத்து
இதனிடையே சிங்கிளை தவிர்த்து தானே இறுதிப்பந்தை அடித்து ஆட வேண்டும் என்ற சாம்சனின் முடிவு அவரது தன்னம்பிக்கையை காட்டுவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநர் சங்ககாரா தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டிக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆனால் இறுதி பந்துவரை காத்திருக்காமல் முன்னதாக அவர் சேசிங்கை முடிக்க முயற்சித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஜிம்மி நீசம் கருத்து
இதனிடையே மோரீஸ் 4 அல்லது 6 ரன்களை அடிப்பதை காட்டிலும் சாம்சன் 6 அடிக்க அதிக வாய்ப்புகள் இருந்தது. அவர் இறுதிப்பந்தை எதிர்கொண்ட விதமும் இதை உணர்த்தியது என்று ஜிம்மி நீசம் தெரிவித்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் 222 இலக்கை நோக்கி அணியை சிறப்பாக வழிநடத்திய சாம்சன், சரியான திட்டமிடலுடன் போட்டியை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்பது பலரது விமர்சனமாக உள்ளது.