த்ரில் வெற்றி
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஓப்பனிங் வீரர் சஞ்சு சாம்சன் மற்றூம் மிடில் ஆர்டரில் தீபக் ஹூடா வெளுத்து வாங்கினர். அதிரடியாக ஆடிய தீபக் ஹூடா 57 பந்துகளில் 104 ரன்களை விளாசினார். சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 77 ரன்களை பறக்கவிட்டார். இதன்பின் ஆடிய அயர்லாந்து அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் 221 ரன்கள் அடித்து, வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுவிட்டது.
அயர்லாந்தின் ஆட்டம்
அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணி கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்றது குறித்து ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். ஹர்திக் பாண்ட்யா, ஒரு கேப்டனாக தனது முதல் தொடரையே வெற்றிகரமாக தொடங்கியுள்ளார் என பாராட்டுக்கள் குவிகின்றன. இந்நிலையில் முன்னாள் வீரர்கள் முகமது கைஃப் மற்றும் அஜய் ஜடேஜா வித்தியாசமான கருத்தை பதிவு செய்துள்ளனர்.
சீனியர்களின் கருத்து
இதுகுறித்து பேசிய முகமது கைஃப், 225 ரன்கள் அடித்த பிறகும் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தான் வென்றது என்றால், பாராட்டுக்கள் அயர்லாந்து அணிக்கு தான் போகவேண்டும். ஐசிசியின் டாப் அணிகளில் அயர்லாந்து இல்லை. ஆனால் ஆட்டத்தின் கடைசி நேரம் வரை இந்திய அணியை எதிர்த்து போராடினர். கடந்த போட்டியிலும் நன்றாக தான் ஆடினர். ஆனால் பவுலிங் பிரச்சினையால் தோல்வியடைந்தனர் எனக்கூறினார்.
அதிர்ஷ்டத்தால் வெற்றி
அஜய் ஜடேஜா பேசுகையில், நான் நினைத்தை விட பல மடங்கு அயர்லாந்து சாதித்துள்ளது. இந்திய அணி தோற்றுவிடும் என்று தான் நான் நினைத்தேன். ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தால் வெற்றி கிடைத்துவிட்டது. இவ்வளவு ரன்கள் அடித்தும் அருகில் வந்துவிட்டனர் என்றால், இந்திய அணி சொதப்பியுள்ளது என அர்த்தம். இனி அயர்லாந்துக்கு எதிராக அதிகம் இலக்கு வைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது எனக்கூறினார்.