சர்வதேச போட்டிகளில் விலகல்
முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கடந்த ஒரு வருடமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக மோதிய இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்த அதிர்ச்சிக்கு இணையாக தோனியும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
முன்னாள் தேர்வாளர் பின்னி கருத்து
இந்நிலையில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை இழந்துவிட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் தேர்வாளருமான ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார். ஸ்போர்ட்ஸ்கீடாவின் பேஸ்புக் பக்கத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் பங்கேற்ற அவர் தோனி குறித்த பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
தோனிக்கு நல்லது - பின்னி
தோனி தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை இழந்துவிட்டதை கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் அவர் ஆடிய ஆட்டமே வெளிப்படுத்துவதாகவும் பின்னி கூறியுள்ளார். தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி புதிதாக அணிக்கு வரும் இளம் வீரர்களுக்கு வழிவிடுவதே அவருக்கு நல்லது என்றும் பின்னி தெரிவித்துள்ளார்.
பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்ற தோனி
தொடர்ந்து பேசிய பின்னி, தோனி தன்னுடைய பிட்னசையும் இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு ஆண்டுகாலமாக சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியுள்ள எம்எஸ் தோனி, கடந்த மார்ச் 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும்வகையில் சிஎஸ்கே சார்பில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றார்.