மும்பை: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் இன்று (செப்.8) வெளியாகியுள்ளது. இதில் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இம்மாதம் தொடங்குகிறது. வரும் அக்டோபர் 24ம் தேதி, இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இதற்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 17 முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. நவம்பர் 14ம் தேதி இத்தொடர் முடிவடைகிறது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறுகிறது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.
குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறகு பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது.
இந்நிலையில், இன்று (செப்.8) உலகக் கோப்பைக்கான இந்திய அணி வெளியாகியுள்ளது. இந்திய அணியில் 15 வீரர்கள் கொண்ட பட்டியலும், 3 ரிசர்வ் வீரர்கள் கொண்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணியில், ரோஹித் சர்மா, விராட் கோலி (c), லோகேஷ் ராகுல், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பண்ட் (wk), இஷான் கிஷன் (wk), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மாற்று வீரர்களாக ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். எனினும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் நடராஜனுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேசமயம், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து அவாய்ட் செய்யப்பட்டு வந்த ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு மீண்டும் டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதில், மற்றொரு சுவாரஸ்ய தகவல் என்னெவெனில், முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது தோனி ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. 2007ம் ஆண்டு, டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்றுக் கொடுத்த மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மூன்று முறை அந்த அணிக்கு கோப்பையை வென்றுக் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, விவேகமும், வேகமும் கலந்த கேப்டன்ஷிப், சமயோஜித புத்தி, இக்கட்டான நேரத்தில் பொறுமையாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் என்று, இந்திய அணி சந்தித்த மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனி. கடந்த 2020ம் ஆண்டு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இந்த நிலையில் தான், இந்திய அணிக்காக மீண்டும் அவர் தனது பங்களிப்பை கொடுக்க தயாராகியுள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட உள்ள தோனி, கேப்டன் விராட் கோலிக்கு நிச்சயம் பக்கபலமாக செயல்படுவார் என்பதில் சந்தேகமில்லை. இவ்வளவு நாள் ஒரு வீரராக தோனியை பார்த்த ரசிகர்கள், இப்போது ஒரு ஆலோசகராக களத்திற்கு வெளியே நின்று கோலியை வழிநடத்தும் ரங்கன் வாத்தியாராக செயல்படப் போவதை பார்க்கப் போகின்றனர்.