யூசுப் பதாக்கு கொரோனா பாதிப்பு
கடந்த சாலை பாதுகாப்பு உலக தொடரில் சச்சின் தலைமையிலான ஜாம்பவான்கள் விளையாடி கோப்பையை கைப்பற்றினர். இறுதிப்போட்டியில் விளையாடிய யூசுப் பதான் அவுட்டாகாமல் 62 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி கவனம் பெற்றார். இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதுகுறித்து அறிவித்துள்ள அவர், தனக்கு குறைவான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதையடுத்து தன்னுடைய வீட்டிலேயே தன்னை தான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மருத்துவத்தையும் எடுத்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பதானுக்கு பாதிப்பு
கடந்த சில தினங்களில் தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும், விரைவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். சாலை பாதுகாப்பு உலக தொடரில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்த வீரர்கள் பாதிப்பு
சச்சின் டெண்டுல்கரும் தன்னுடைய வீட்டில் தன்னை தனிப்படுத்திக் கொண்டு மருத்துவ சிகிச்சை செய்து வருகிறார். இந்த சாலை பாதுகாப்பு உலக தொடரில் பங்கேற்ற அடுத்தடுத்த வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கலாம்.