இந்தியாவை வெற்றிகொண்ட நியூசிலாந்து
நியூசிலாந்தின் வெல்லிங்டனில் நடந்து முடிந்துள்ள இந்தியா -நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை நியூசிலாந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்திய அணிக்கு இந்த தோல்வி நெருக்கடியை தந்துள்ளது. இந்த தோல்வி குறித்து பல்வேறு தரப்பினரும் ரசிகர்களும் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் கருத்து
இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 360 புள்ளிகளுடன் நல்ல துவக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்திய அணி, நியூசிலாந்திடம் தோற்றது ஏமாற்றமளிப்பதாக முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் விவிஎஸ் லஷ்மன் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் இந்தியா பங்கேற்ற கடந்த 7 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த தோல்வியை கண்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தோல்விக்கு முக்கிய பங்கு
இந்தியாவின் டாஸ் தோல்வி, இந்திய அணியின் தோல்வியில் முக்கிய பங்கு வகித்தாலும், அதை மட்டுமே காரணம் கூறிக் கொண்டிருக்க முடியாது என்றும் லஷ்மன் தெரிவித்துள்ளார். முதல் இன்னிங்சில் பிட்ச் உள்ளிட்டவை ரன் குவிப்பில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தொடர்ந்த பந்துவீச்சின்மூலம் இரண்டாவது இன்னிங்சில் பிட்ச் உள்ளிட்டவை பழக்கப்பட்டிருக்கும். அதனால் அதையே குறைகூற முடியாது என்றும் கூறியுள்ளார்.
ஷார்ட் பந்துமூலம் விக்கெட்
பந்துவீச்சில் நியூசிலாந்தின் திட்டமிடல் குறித்து பாராட்டு தெரிவித்த விவிஎஸ் லஷ்மன், பல்வேறு ஆங்கில்களில் ஷார்ட் பந்துகளை வீசி இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை அவர்கள் திணறடித்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார். முதல் இன்னிங்சில் சிறிது சொதப்பினாலும், டிரெண்ட் போல்ட்டின் சிறப்பான பந்துவீச்சு, மிகுந்த பாராட்டுக்குரியது என்றும், டிம் சவுதி, கைல் ஜாமீசன் ஆகியோரின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தொழில்நுட்பத்தை மாற்ற வேண்டும்
வெளிநாடுகளில் இந்திய அணியினரின் துவக்க பார்ட்னர்ஷிப் எப்போதும் கவனத்தை பெறும் என்று கூறிய லஷ்மன், ஆனால் இதை துவக்க வீரர் பிரித்வி ஷா தரத்தவறியுள்ளதாக கூறியுள்ளார். அவர் தனது தொழில்நுட்பங்களை மாற்றியமைத்து ஆன்-சைட் பந்துகளை அதிகளவில் அடிப்பதை விட்டு, நேரடியாக பந்துகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
லஷ்மன் அறிவுறுத்தல்
முதல்முறையாக சர்வதேச அளவிலான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ள பிரித்வி ஷா, தன்னுடைய எதிரணி வீரர் கேன் வில்லியம்சனிடமிருந்து எவ்வாறு விளையாடுவது என்ற பாடத்தை கற்க வேண்டும் என்று லஷ்மன் கூறியுள்ளார். மேலும் அவருடைய சக துவக்க விரர் மயங்க் அகர்வாலின் அனுபவமிக்க ஆட்டத்தையும் கற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இஷாந்த் குறித்து லஷ்மன்
காயம் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேல் ஓய்வு எடுத்துவிட்டு, வந்து குறுகிய காலத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் சர்மாவிற்கு லஷ்மன் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆயினும் இந்தியா எதிரணியை 183 ரன்கள் அதிகமாக எடுக்கவிட்டதே தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 100 ரன்கள் வரை அதிகமாக எடுத்தால் அது சமாளிக்கக்கூடியது என்றும் அவர் கூறியுள்ளார்.