கடந்த ஜூன் மாதத்தில் ஓய்வு
இந்திய கிரிக்கெட்டில் கனவு நாயகனாக விளங்கிவரும் யுவராஜ் சிங், தன்னுடைய சிறந்த ஆட்டத்தின்மூலம் பல்வேறு சாதனைகளை புரிந்தவர். இவர் எப்போதுமே ரசிகர்களுக்கு சிறந்த ஆட்டத்தை பரிசளித்தவர். கடந்த ஜூன் மாதத்தில் தன்னுடைய ஓய்வை யுவராஜ் சிங் அறிவித்தபோது பல ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
யுவராஜ் சிங் ஆட்டம்
ஓய்வை அடுத்து தற்போது அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 போட்டித் தொடரில் மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக யுவராஜ் சிங் விளையாடி வருகிறார்.
ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வம்
இந்நிலையில் யுவராஜ் சிங் இந்த தொடரில் விளையாடி வருவது மிகுந்த மகிழ்ச்சியான விஷயம் என்றும் யுவராஜின் ஆட்டத்தைக் காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் மைதானத்திற்கு வருவதாகவும் டி10 கோப்பையின் நிறுவனர் சாஜி முல்க் தெரிவித்துள்ளார்.
இளம் வீரர்களுக்கு ஊக்கம்
கிரிக்கெட்டின் புதிய முயற்சியான டி10 போட்டிகளில் யுவராஜ் சிங், சாஹிர் கான் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடுவது, அந்த போட்டிகளில் விளையாட இளம் வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்றும் முல்க் கூறியுள்ளார்.
தனித்துவமாக நிற்கும் யுவராஜ்
யுவராஜ் இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் டி10 போட்டிகள் உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளதாகவும் முல்க் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் மோர்கன், ஆன்ட்ரே ரஸ்ஸல், ஷேன் வாட்சன், போலார்டு உள்ளிட்ட உலக அளவிலான வீரர்கள் இருந்தபோதிலும், இவர்களில் யுவராஜின் ஆட்டம் தனி கவனத்தை பெற்றுள்ளதாகவும் முல்க் குறிப்பிட்டுள்ளார்.
டிஆர்பி ரேட் அதிகரிப்பு
அபுதாபியில் சேக் சையத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டி10 கிரிக்கெட் போட்டிகளை காண உலக அளவில் அதிகமான ரசிகர்கள் வருவதாகவும் இதன்மூலம் அவர்களது கனவு நனவாவதாகவும் முல்க் தெரிவித்துள்ளார். மேலும் யுவராஜின் ஆட்டத்தின் மூலம் இந்தியாவில் டிஆர்பி ரேட்டிங் இருமடங்காக உயர்வதாகவும் அவர் மேலும் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது
இந்நிலையில் இந்த டி10 போட்டிகளின் இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங்கின் மராத்தா அரேபியன்ஸ் அணி, டெக்கான் கிளாடியேட்டர் அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை மோதவுள்ளது.