திட்டம்
இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி தயாராக வேண்டும் என்ற நோக்கில் சிறிய டி20 தொடரை நடத்த 2 நாடுகளுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்டது. ஆனால் நீண்ட வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி மோதவிருப்பதாக அந்நாட்டு பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி
இவ்விரு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டி தொடர் இந்தாண்டு இறுதியில் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் 6 நாட்கள் மொத்தம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் போட்டி எங்கு நடத்தப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
ஏக்கம்
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் அரசியல் ரீதியான பிரச்னைகள் காரணமாக இரு நாட்டு அணிகளும் தனிப்பட்ட தொடர்களில் மோதிக்கொள்ளாமல் இருந்து வருகிறது. கடைசியாக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடந்த 2012 - 2013ம் ஆண்டு காலக்கட்டத்தில் போட்டி தொடர் நடைபெற்றது. இதன் பிறகு இரு அணிகளும், உலகக்கோப்பை , ஆசிக்கோப்பை போன்ற சர்வதேச சாம்பியன்ஷிப் தொடர்களிலேயே மோதி வருகின்றன.
அஃப்ரிடி நம்பிக்கை
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் அஃப்ரிடி, இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே கிரிக்கெட் என்பது மிக முக்கியமானது. அரசியலில் இருந்து விளையாட்டை தள்ளி வைத்து பார்க்க வேண்டும். கிரிக்கெட் போட்டிகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்படும் என தெரிவித்தார்.
மகிழ்ச்சி
தொடர்ந்து பேசிய சாகித் அஃப்ரிடி, இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு வருகை தருவதால் மகிழ்ச்சியடைகின்றனர். விளையாட்டு மூலம் உறவுகளை மேம்படுத்திக்கொள்லலாம், ஆனால் அதனை யாரேனும் விரும்பவில்லை என்றால் இருக்கும் பிரச்னையுடன் அப்படியே தான் இருக்க வேண்டும் என தெரிவித்தார். இந்திய அணி கடைசியாக கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று ஆசியக்கோப்பையில் பங்கேற்றது. அதன் பிறகு செல்லவில்லை. இந்த டி20 தொடர் சரியாக நடைபெற்றால் 2023ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்பதற்கான சிக்கல் நீங்கவும் வாய்ப்புள்ளது.