தலிபான்கள் கட்டுப்பாட்டில்
ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை, ஷரியத் சட்டம் தான் என தெளிவாக தலிபான்கள் அறிவித்துவிட்டனர். மேலும், தலிபான்கள் பெண்கள் ஜீன்ஸ் அணியக் கூடாது என தடை விதித்துள்ளனர். அங்கு தங்கியிருந்த அமெரிக்காவின் கடைசி ராணுவ வீரர் மேஜர் ஜெனரல் கிறிஸ் டோனாஹூ இன்று அதிகாலை 12 மணிக்கு முன் வெளியேறினார். இதை தாலிபான்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்போது தான் முழுமையான சுதந்திரம் கிடைத்துள்ளதாக அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை விடிவதற்கு முன்பே தலிபான்கள் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
வெளியான வீடியோ
காபூல் முழுவதும் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடினர். தாலிபான்கள் 2001 ல் இருந்ததை விட வலுவாக மாறி, 20 வருடப் போரை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளுக்கான அவசர மற்றும் அவமானகரமான வெளியேற்றத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், கடைசி அமெரிக்க வீரரான மேஜர் ஜெனரல் கிறிஸ் டோனாஹூ நள்ளிரவுக்கு ஒரு நிமிடத்திற்கு முன்பே புறப்படும் காட்சிகள் மற்றும் தாலிபன்கள் விமான நிலையத்திற்குள் நுழைவது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. "கடைசி அமெரிக்க சிப்பாய் காபூல் விமான நிலையத்தை விட்டு வெளியேறினார், நம் நாடு முழு சுதந்திரம் பெற்றது" என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் காரி யூசுப் அல் ஜசீரா டிவியில் கூறினார், காபூலில் இருந்து அமெரிக்காவின் கடைசி சிப்பாய் உடன் வெளியேறும் விமானத்தின் காட்சிகளை அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது.
தலிபான்களுக்கு ஆதரவு
இந்நிலையில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் நைலா இனாயத் ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், "தலிபான்கள் இந்த முறை சாதகமான, நேர்மறையான மனநிலையில்தான் ஆட்சிக்கு வந்துள்ளார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. கிரிக்கெட் விளையாட அனுமதித்ததுபோல், பெண்கள் பணிக்குச் செல்ல இந்த முறை தலிபான்கள் அனுமதிப்பார்கள், அரசியலில் பெண்கள் ஈடுபடவும் தலிபான்கள் அனுமதிப்பார்கள். தலிபான்கள் கிரிக்கெட்டுக்கு நல்ல ஆதரவு தரக்கூடியவர்கள், அவர்கள் கிரிக்கெட்டை விரும்பக்கூடியவர்கள்" எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட்
அப்ரிடியில் இந்த கருத்துகள் கிரிக்கெட் உலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், பாகிஸ்தான் தலிபான்களுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில், வருங்காலத்தில் அந்த நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்வதை மற்ற நாடுகள் நிரந்தரமாக தடை செய்யலாம். இப்போதே அந்த நாட்டுக்கு பல அணிகள் சுற்றுப்பயணம் செய்வதில்லை. அவர்கள் வெளிப்படையாக தலிபான்களுக்கு ஆதரவு அளித்தால், முற்றிலும் அங்கு சென்று விளையாடுவதற்கு தடை விதிக்கப்படலாம். இதற்கு முன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பல முறை தலிபான்களுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.