சிறப்பான வழிகாட்டுதல்
என்சிஏ தலைவராக செயல்பட்டு வருகிறார் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட். கடந்த 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் அன்டர் 19 மற்றும் இந்திய ஏ அணிகளுக்கான தலைமை கோச்சாக செயல்பட்டு இளம் வீரர்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல்களை அவர் வழங்கியுள்ளார்.
முன்னாள் வீரர்களுக்கு வேண்டுகோள்
தற்போது என்சிஏ தலைவராக பணியாற்றிவரும் டிராவிட் தொடர்ந்து பல்வேறு விதங்களில் வீரர்களை ஊக்குவித்து வருகிறார். இந்நிலையில், முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான்கள் ராகுல் டிராவிட்டின் செயல்பாடுகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறப்பு கவனத்தை செலுத்த கோரிக்கை
பாகிஸ்தானில் சிறப்பான இளம் வீரர்களுக்கு குறைபாடு உள்ள நிலையில், முன்னாள் ஜாம்பவான்கள் இந்த விஷயத்தில் சிறப்பான கவனத்தை செலுத்தி வீரர்களை தயார் செய்ய வேண்டும் என்றும் அதன்மூலம் சர்வதேச அளவில் பாகிஸ்தான் அணியின் சிறப்பு மிளிரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை நடத்த வேண்டுகோள்
இன்சமாம் உல் ஹக், யூனிஸ் கான், முகமது யூசுப் போன்றவர்கள் பாகிஸ்தானின் இளம் வீரர்களை சிறப்பாக உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதையும் அப்ரிடி சுட்டிக் காட்டியுள்ளார். ஆயினும் மிஸ்பா மற்றும் யூனிசின்கீழ் விளையாட முடியாது என்று கூறியுள்ள முகமது அமிர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் அப்ரிடி கேட்டுக் கொண்டுள்ளார்.