வாழ்நாள் தடை விதிப்பு
கடந்த 1995ம் ஆண்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஷேன் வார்னே, மார்க் வாக் மற்றும் டிம் மே ஆகியோர் கொடுத்த சூதாட்ட புகார் நிரூபிக்கப்பட்டதையடுத்து முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சலீம் மாலிக்கிற்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் மேற்கொண்ட மேல்முறையீட்டை விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த 2008ல் அவரது வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டது.
தடையை நீக்காத பாக். கிரிக்கெட் வாரியம்
2008ல் நீதிமன்றம் சலீம் மாலிக்கின் வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி அவரது தடையை இன்னும் நீக்காமல் உள்ளது. இதேபோல தடைவிதிக்கப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் முகமது அமீர், சல்மான் பட், முகமது ஆசிப் மற்றும் சர்ஜில் கான் ஆகியோருக்கு அணியில் பங்கேற்று விளையாட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய தடை ஏன் நீக்கப்படவில்லை என்று சலீம் மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரண்டாவது சான்ஸ் அளிக்க வேண்டுகோள்
இதனிடையே, தன்னுடைய வாழ்நாள் தடையை நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசிக்கு சலீம் மாலிக் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் மற்றும் வீரர்களுக்கு கோச்சாக பணிபுரிந்து சேவை புரிய தனக்கு இரண்டாவது சான்ஸ் வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.
முன்னாள் வீரர்கள் ஆதரவு
கடந்த 1982 முதல் 1999 வரையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் விளையாடியுள்ள சலீம் மாலிக், 103 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 283 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். இந்நிலையில் சலீம் மாலிக்கின் வாழ்நாள் தடையை நீக்க வேண்டும் என்று அவரது முன்னாள் சக வீரர்களும் அவருக்காக குரல் கொடுத்துள்ளனர்.