2 நாள் நடந்த போட்டி
வழக்கமாக ஒரே நாளில் முடியும் பெரும்பாலான போட்டிகளில் ஒரு மாற்றம் இந்த உலக கோப்பை தொடரில் நிகழ்ந்திருக்கிறது. முதல் அரையிறுதி போட்டி 2 நாட்கள் நடந்திருக்கிறது. மான்செஸ்டரில் நேற்று இந்த போட்டி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து முதலில் களம் இறங்கியது. இந்தியாவின் அபார பந்து வீச்சில் திணறிய அந்த அணி ரன் குவிக்க தடுமாறியது. 47வது ஓவரில் 5 விக். இழப்புக்கு 211 ரன்கள் இருந்தபோது மழை குறுக்கிட்டது.
ரிசர்வ் நாள்
தொடர்ந்து மழை பெய்ததால், ஆட்டத்தை மேலும் தொடர்வதில் சிக்கல் எழுந்தது. பின்னர் ஒரு வழியாக (வேறு வழியின்றி) ரிசர்வ் டேவில் மீண்டும் தொடங்கும் என்று கூறி ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது. பின்னர் ரிசர்வ் டேயில் தொடர்ந்த ஆட்டத்தில் 8 விக். இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது நியூசி.
சரிந்த பேட்டிங் ஆர்டர்
அதன் பின்னர் 240 ரன்களை நோக்கி பயணித்த இந்தியாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ரோகித், கோலி, ராகுல் என 3 பேருமே 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி வைத்தியத்தை ஆரம்பித்து வைத்தனர். இவர்களுடன் தினேஷ் கார்த்திக்கும் சேர்ந்து கொண்டார். பன்டும், ஹர்திக் பாண்டியாவும் ஓரளவு சமாளித்து ஆடினர். பிறகு அவர்களும் அவுட்டாகினர்.
ஜடேஜா, தோனி அபாரம்
7வது விக்கெட்டுக்கு தோனியும், ஜடேஜாவும் அற்புதமாக ஆடி.. அனைவருக்கும் நம்பிக்கை ஊட்டினர். ஆனால் அந்த நம்பிக்கையும் 77 ரன்களில் ஜடேஜா அவுட்டாகும் போது தெரிந்தது. அதற்கடுத்து தோனியும் 50 ரன்களுக்கு அவுட்டானார். 221 ரன்களில் இந்தியா ஆல் அவுட்டானது. பைனலுக்கு போகும் வாய்ப்பை இழந்தது.
முன்பே சொன்ன ஸ்ரீகாந்த்
இந்திய அணியின் தோல்வி.. இன்றுதான் நடந்திருந்தது என்று சொன்னாலும்... நேற்றே அதை சரியாக நாடி பிடித்து சொல்லியிருந்தார் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். நேற்றைய நியூசிலாந்து பேட்டிங்கின் போது மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் கழித்து போட்டி ரிசர்வ் டேவுக்கு தள்ளி வைக்கப் படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கேள்விக்கு பதில்
இது குறித்து வழக்கம் போல.. பிரபல தொலைக்காட்சியில் அப்போது விவாதிக்கப் பட்டது. அதில் பங்கேற்றிருந்த ஸ்ரீகாந்திடம் ரிசர்வ் டே ஆட்டம் எப்படி இருக்கும்? இந்தியாவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஒரு கேள்விக்கு மிக தீர்மானமாக ஒரு பதிலை சொன்னார் ஸ்ரீகாந்த்.
ஆட்டத்தின் ரிதம் போய்விடும்
இனி போட்டி நாளை (அதாவது இன்று புதன்கிழமை) என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நியூசிலாந்துக்கு லக் என்றே சொல்ல வேண்டும். இன்றே நடந்தால் அது இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கும். நாளை எனும் போது அந்த ஆட்டத்தின் ரிதம் போய்விடும். போக்கும் மாறிவிடும். இது இந்தியாவுக்கு தோல்வியை அளிக்கக் கூடும் என்று பேசினார். நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்றார். ஆனால், கடைசியில் அவரின் கணிப்பு தான் முதல் அரையிறுதியில் பலித்து இருக்கிறது.