பேட்டிங் வரிசை
சர்வதேச டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தற்போது அசுர பலத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. எனவே அதே நம்பிக்கையுடன் நியூசிலாந்து அணியையும் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து பிட்ச்சானது வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஒன்றாகும். எனவே இங்கு இந்திய அணியின் பேட்டிங் வரிசை எப்படி இருக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அட்டாக்கிங் ஓப்பனிங்
இந்திய அணியை பொறுத்தவரை சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா தான் ஓப்பனிங் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இருவருமே அதிரடி ஆட்டக்காரர்கள் என்பதால் வெகு சீக்கிரமாக முதல் விக்கெட் வீழ்ந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இந்நிலையில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களுக்கு முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் அட்வைஸ் கூறியுள்ளார்.
யுவ்ராஜ் அட்வைஸ்
இதுகுறித்து பேசியுள்ள யுவ்ராஜ் சிங், டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா தற்போது நல்ல அனுபவம் பெற்றவராக உள்ளார். ஓப்பனராக இதுவரை 7 சதங்கள் வரை அடித்துள்ளார். சுப்மன் கில்லும் நல்ல நம்பிக்கையுடன் உள்ளார். ஆனால் சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா இருவருமே இதுவரை இங்கிலாந்தில் ஓப்பனிங் செய்ததில்லை.
பழக வேண்டும்
இங்கிலாந்து களத்தை பொறுத்தவரை ஒவ்வொரு பகுதி நேரத்தை வைத்து பேட்டிங் செய்ய முயல வேண்டும். காலை நேரத்தில் மிக விரைவாகவே பந்தில் நல்ல ஸ்விங் மற்றும் வேகம் இருக்கும். மதிய நேரத்தில் ரன் அடிக்க ஏதுவாக இருக்கும். மீண்டும் தேனீர் இடைவெளிக்கு பிறகு பந்தில் ஸ்விங் இருக்கும். ஒரு பேட்ஸ்மேனாக இதற்கெல்லாம் பழகிவிட்டால் சுலபமாக வெற்றி பெறலாம்.
யுவ்ராஜின் அதிருப்தி
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும் என ரவிசாஸ்திரி உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் தெரிவித்திருந்தனர். அதில் யுவ்ராஜ் சிங்கும் இணைந்துள்ளார். அவர், தற்போதுள்ள சூழலை வைத்து பார்த்தால், 3 போட்டிகள் கொண்ட தொடராக வைத்து வெற்றியாளரை நிர்ணயிக்க வேண்டும். முதல் போட்டியில் தோற்றால் அடுத்த 2 போட்டிகளில் கம்பேக் கொடுக்கலாம். ஏனென்றால் நியூசிலாந்து அணி ஏற்கனவே இங்கிலாந்து சென்று டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஆனால் இந்திய அணிக்கு அப்படி எதுவும் கிடைக்காதது பின்னடைவாக உள்ளது.