2 ஐபிஎல் தொடர்
2 மாதங்களாக திருவிழாவை போன்று ரசித்து வந்த ரசிகர்கள் இனி அடுத்த ஐபிஎல் எப்போது என காத்துள்ளனர். இந்நிலையில் இனி வருடத்திற்கு 2 ஐபிஎல் தொடர்களை நடத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி, ஆகாஷ் சோப்ரா, டேனியல் விட்டோரி, இயான் பிஷப் உள்ளிட்டோர் முன்வைத்துள்ளனர்.
என்ன காரணம்
சர்வதேச டி20 போட்டிகளில் ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க போன்ற நாடுகள் ஆடும் போது சுவாரஸ்யமாக உள்ளன. ஆனால், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடுகையில், அதிரடிகள் நிறைந்த டி20 போட்டிகளில் தொடக்கத்திலேயே ஒரு அணிக்கு சார்பாக வெற்றி சென்றுவிடுகிறது. எனவே சர்வதேச டி20க்களை குறைத்துவிட்டு ஐபிஎல்-ஐ அதிகரிக்க திட்டம் போடப்பட்டுள்ளது.
ரவிசாஸ்திரியின் பேச்சு
இதுகுறித்து பேசிய ரவிசாஸ்திரி, இந்தியாவின் பயிற்சியாளராக இருந்தபோது தரமில்லாத டி20 போட்டிகள் நடப்பதை நேரடியாகப் பார்த்தேன். எனவே
கால்பந்தாட்டத்தை போல உலகக்கோப்பையில் மட்டும் சர்வதேச டி20 போட்டிகளை வைத்துவிட்டு, ஐபிஎல் போன்ற உள்நாட்டு தொடர்களை அதிகரிக்க வேண்டும். ஏனென்றால் உலகக்கோப்பையை தவிர மற்ற சர்வதேச டி20 போட்டிகளை ரசிகர்கள் நினைவில் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
பிசிசிஐ-ன் முடிவு என்ன
இதற்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் ஆதரவளித்து பேசியுள்ளார். அதில், ஒரு வருடத்தில் 2 ஐபிஎல் என்ற முறை விரைவில் நடைமுறைக்கு வரும் என நான் நிச்சயமாக நம்புகிறேன். அது வெகுதொலைவில் இல்லை எனக்கூறியுள்ளார். பிசிசிஐ-ம் வருமானம் அதிகரிப்பதை மனதில் வைத்து இதுகுறித்து முடிவெடுக்கும் எனத்தெரிகிறது.