ஓய்வு அறிவிப்பு
2019 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிதான் இந்தியாவுக்காக தோனிக்காக விளையாடிய கடைசிப் போட்டி. அதன் பின்பு கிட்டத்தட்ட ஒருவருட காலம் தோனியை மைதானத்தில் பார்க்காமல் இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி கிடைத்தது. கடந்தாண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, இந்தியா தன்னுடைய 74 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வந்த நாளில் சரியாக இரவு 7.29 மணிக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றிக் கூறி சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைப்பெற்றார் இந்திய கிரிக்கெட்டின் நாயகன் மகேந்திர சிங் தோனி.
ரசிகர்களின் ஏக்கம்
எப்படியாவது தங்களுடைய சூப்பர் ஸ்டார் தோனியை இந்திய அணியின் ஜெர்சியில் மீண்டும் பார்த்துவிட முடியாதா என ரசிகர்கள் பலரும் ஏங்கினர். குறிப்பாக அவருக்கு ஃபேரவெல் போட்டி கூட வைக்காமல் வழி அனுப்புவதா என பிசிசிஐ மீது ரசிகர்கள் கடும் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். ஃபேரவெல் போட்டி நடத்தாதற்கான காரணமும் இன்று வரை தெரியவில்லை.
வெளியான காரணம்
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் அதற்கான காரணத்தை உடைத்துள்ளார். தோனிக்கு ஃபேரவெல் போட்டி அமையாததற்கு காரணம் டி20 உலகக்கோப்பை தொடர் தான். இந்த தொடர் கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்தது. இந்த தொடர் ஒத்திவைத்த உடனேயே தோனி தனது ஓய்வை அறிவித்து விட்டார். ஒருவேளை டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றிருந்தால், தோனி நிச்சயம் அதில் பங்கு பெற்று, ஃபேரவெல் போட்டியில் விளையாடியிருப்பார்.
சிஎஸ்கே
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தோனியை ஆண்டு தோறும் நடைபெறும் ஐபிஎல்-ல் மட்டுமே ரசிகர்கள் கண்டு வருகின்றனர். சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் தோனி இந்தாண்டு அல்லது அடுத்தாண்டுடன் உள்நாட்டு தொடர்களில் இருந்தும் ஓய்வு பெறுவார் எனக்கூறப்படுகிறது.